» சினிமா » செய்திகள்
பால்கே விருது: ரஜினிக்கு தமிழக ஆளுநர், முதல்வர் வாழ்த்து
திங்கள் 25, அக்டோபர் 2021 3:53:31 PM (IST)
தாதா சாகேப் பால்கே விருது பெற்றுள்ள ரஜினிகாந்துக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்னர்.
தமிழக ஆளுநர் வெளியிட்ட செய்தியில், "இந்திய திரைத்துறையில் தங்களின் அளப்பரிய பங்களிப்பிற்காக, இந்திய திரைப்பட உலகின் மிக உயரிய விருதான மற்றும் வெகு சிலருக்கே கிடைக்கப்பெற்ற அங்கீகாரமான தாதா சாகேப் பால்கே விருது தங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதற்காக இந்திய மக்களின் சார்பாகவும், என் சார்பாகவும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்நாள், திரைப்படங்களை விரும்பும் அனைவருக்கும் மகிழ்ச்சியளிக்கக்கூடியதொரு பொன் நாளாகும். இந்தியத் திரை உலகிற்கான தங்களின் வியத்தகு பங்களிப்புடன் பொது வாழ்க்கையிலும் தனிப்பட்ட வாழ்விலும் தங்களின் தலைசிறந்த பண்பினால் நம் நாட்டு இளைஞர்களை கவர்ந்திழுத்த பண்பாளரான நீங்கள், நல்ல உடல்நலத்தோடு ஆண்டுகள் பல நீடுடி வாழ்ந்திட இறைவனை வேண்டுகிறேன்.”
முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட செய்தியில், திரைத் துறையின் உயரிய விருதான தாதாசாகேப் பால்கே விருது பெறும் அன்பு நண்பர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு நெஞ்சம்நிறை வாழ்த்துகள்! திரைவானின் சூரியன் ரஜினி, தமிழ்த் திரையுலகை அடுத்தகட்டத்திற்கு கொண்டு சென்று உலகளவிலான பல விருதுகளைப் பெற வேண்டும்! வாழ்த்துகள்!
நேசத்துடன் திரைக்கலையைப் போற்றி தரமான படங்கள் வழியே நம் நெஞ்சகங்களில் இடம்பிடித்து, இப்போது தேசிய திரைப்பட விருதுகள் பெறும் வெற்றிமாறன், விஜய் சேதுபதி, தனுஷ், ஆர்.பார்த்திபன், இமான் மற்றும் விஷால் ஆகியோருக்கும் எனது வாழ்த்துகள். மேலும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரஜினிகாந்த் அவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டார். இது போல் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கனிமொழி எம்பி உள்ளிட்டோரும் ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.