» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

எல் நினோ தாக்கம்: நெல், வாழை பயிர்களுக்குக் காப்பீடு செய்ய ஆட்சியர் அறிவுறுத்தல்!

வெள்ளி 17, ஜூலை 2026 3:56:03 PM (IST)

NellaiFArmers.jpg

"சூப்பர்" எல் நினோ காலநிலை தாக்கம் வலுப்பெற்றதால் விவசாயிகள்  நெல், வாழை பயிர்களுக்கு காப்பீடு செய்ய வேண்டும் என்று திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் ஆனந்த் மோகன் அறிவுறுத்தினார்.

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் ஆனந்த் மோகன் தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் எல் நினோ காலநிலை மாற்ற எச்சரிக்கைகள், பயிர்க்காப்பீடு மற்றும் வேளாண் நலத்திட்டச் செயல்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

திருநெல்வேலி மாவட்டத்தில் ஜூன் மாதத்தில் 68.31 மி.மீ மழை பெய்துள்ளது. இது வழக்கமான மழையளவை (29.60 மி.மீ) விட 130.78 சதவீதம் அதிகம் என்றாலும், ஜூன் வரையிலான ஒட்டுமொத்த சராசரி மழையுடன் ஒப்பிடும்போது 8.62 சதவீதம் குறைவாகும். ஜூலை 16 வரை 1.68 மி.மீ மழை பதிவாகியுள்ளது. ஜூன் மாதத்தில் 5,676.98 ஹெக்டேர் பரப்பில் வேளாண் பயிர்களும், 663.86 ஹெக்டேர் பரப்பில் தோட்டக்கலை பயிர்களும் சாகுபடி செய்யப்பட்டுள்ளன.

விவசாயிகளின் நில உடைமை ஆவணங்களைச் சரிபார்த்து வேளாண் அடுக்ககம் வலைதளத்தில் பதிவேற்றம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஜூலை 16 வரை 30,629 பி.எம்.கிசான் விவசாயிகள் மற்றும் 16,438 இதர விவசாயிகள் உட்பட மொத்தம் 47,067 விவசாயிகளின் விபரங்கள் பதிவேற்றப்பட்டுள்ளன. இதுவரை பதிவு செய்யாத 7,459 விவசாயிகள் இ-சேவை மையம் அல்லது வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகங்கள் மூலம் பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. 

பி.எம்.கிசான் திட்டத்தில் e-KYC நிலுவையில் உள்ள 1,324 பயனாளிகளும், வங்கிக் கணக்குடன் [Aadhaar Redacted] எண் இணைக்காத 943 பயனாளிகளும் ஆவணங்களுடன் விரிவாக்க மையங்களை அணுக அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வலுப்பெற்று வரும் எல் நினோ காலநிலை தாக்கத்தால் பருவமழை தாமதம், நீர்ப்பற்றாக்குறை மற்றும் அதிக வெப்பநிலை நிலவும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனால் அதிக நீர் தேவைப்படும் நெல் மற்றும் வாழைப் பயிர்களைப் பாதுகாக்கப் பிரதமரின் பயிர்க்காப்பீடு திட்டத்தின் கீழ் விவசாயிகள் காப்பீடு செய்ய வேண்டும். காப்பீட்டுக் கட்டணமாக நெற்பயிருக்கு ஏக்கருக்கு ரூ. 745 மற்றும் வாழைப்பயிருக்கு ஏக்கருக்கு ரூ. 2,362 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

நெற்பயிருக்கு ஜூலை 31, 2026 மற்றும் வாழைப்பயிருக்கு செப்டம்பர் 15, 2026 காப்பீடு செய்வதற்கான கடைசி நாட்களாகும். இதற்கு விண்ணப்பத்துடன் கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் நடப்பு பருவ அடங்கல், [Aadhaar Redacted] அட்டை நகல், சிட்டா/பட்டா நகல் மற்றும் வங்கி கணக்கு புத்தக நகல் ஆகியவை அவசியமாகும். பயிர்க்காப்பீடு விபரங்களுக்கு 14447 என்ற கட்டணமில்லா எண்ணைத் தொடர்பு கொள்ளலாம். காரிப் 2026-க்கான மின்னணு பயிர் கணக்கீட்டுப் பணிகளும் தொடங்கப்பட்டுள்ளன.

கோடை பருவ நெல் கொள்முதலுக்காகப் பாப்பாக்குடி, தெற்கு கல்லடைக்குறிச்சி-1, அயன்சிங்கம்பட்டி, தெற்கு பாப்பான்குளம், தெற்கு வீரவநல்லூர், பூங்குடையார்குளம், வடமலைசமுத்திரம், சீதபற்பநல்லூர், இட்டேரி, திடியூர், செங்குளம் ஆகிய கிராமங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

உழவர் கடன் அட்டை மூலம் பயிர்க்கடனாக 81 விவசாயிகளுக்கு ரூ. 1.100 கோடியும், 339 கால்நடை விவசாயிகளுக்கு ரூ. 3.170 கோடியும் கடன் வழங்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் 822 குளங்களில் வண்டல் மண் எடுக்க அனுமதி வழங்கப்பட்டதில், இதுவரை இ-சேவை மூலம் 3,523 பயனாளிகளுக்கு 95,552.30 கன மீட்டர் மண் எடுக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

முன்னதாக நடைபெற்ற கூட்டத்தில் பெறப்பட்ட 179 மனுக்களுக்கும் தீர்வு காணப்பட்டுள்ளது. கூட்டத்தின் நிறைவாக நுண்ணீர் பாசனத்திட்டத்தின் கீழ் 75% மானியத்தில் தெளிப்பானும், 50% மானியத்தில் பசுந்தாள் உரமும் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டன. இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ச.வித்யா, மாவட்ட வன அலுவலர் இளங்கோ, வேளாண்மை இணை இயக்குநர் பூவண்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




Arputham Hospital





Thoothukudi Business Directory