» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
திருமாவளவன் குறித்த நோபல் பரிசு கருத்தைத் திரும்பப் பெறுகிறேன்: வைகோ பேட்டி!
வெள்ளி 10, ஜூலை 2026 8:49:57 AM (IST)
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் நடைபெற்ற ம.தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டத்தில் பங்கேற்ற கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ, செய்தியாளர்களைச் சந்தித்துப் பேட்டி அளித்தார்.
ம.தி.மு.க. பொதுக்குழு முடிவின்படி தி.மு.க. கூட்டணியிலிருந்து விலகி, தமிழக வெற்றிக் கழகத்துடன் இணைந்துள்ளதாக வைகோ தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், "ஆட்சியில் பங்கேற்போம், அதேநேரம் தி.மு.க. கூட்டணியிலும் தொடருவோம் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறியது அதிர்ச்சி அளித்தது. வடதுருவமும் தென்துருவமும் எப்படிச் சேர முடியும் என்ற அர்த்தத்திலேயே அவருக்கு நோபல் பரிசு கொடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தேன்.
அவர் ஒடுக்கப்பட்ட மக்களின் நம்பிக்கை நட்சத்திரமாக, பெரிய தலைவராக வர வேண்டும் என்று 15 ஆண்டுகளுக்கும் மேலாக ஊக்கமளித்து வருகிறேன். என் சொற்கள் அவரது மனதைப் புண்படுத்தியிருந்தால், அந்த வார்த்தைகளைத் திரும்பப் பெற்றுக் கொள்கிறேன். விடுதலை சிறுத்தைகள் கட்சி மீது எவ்வித கசப்புணர்வும் கிடையாது" என்று விளக்கமளித்தார்.
தமிழகத்தில் ஊழலை ஒழிக்க முதலமைச்சர் விஜய் எடுத்து வரும் நடவடிக்கைகளால் அவரது செல்வாக்கு அதிகரித்து வருவதாகக் குறிப்பிட்ட வைகோ, ம.தி.மு.க.விலிருந்து இரண்டு எம்.எல்.ஏ.க்கள் சென்றதைப் பற்றித் தனக்குக் கவலையில்லை என்றார். மேலும், 'பம்பரம்' சின்னத்தைத் தேர்தல் ஆணையம் முடக்கவில்லை என்றும், குறிப்பிட்ட விகிதாசாரத் தொகுதிகளில் போட்டியிடும்போது அந்தச் சின்னம் மீண்டும் தங்களுக்குக் கிடைக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
நிலத்தடி நீர் மற்றும் சுற்றுச்சூழலைப் பாதிக்கும் சீமைக்கருவேல மரங்களைத் தனது உடல்நலம் பாதிக்கப்பட்டபோதும் முன்னின்று அகற்றி வருவதாகத் தெரிவித்தார். தமிழக நலன்களைக் காக்க ம.தி.மு.க. பாடுபட்டு வருவதாகவும், மீத்தேன், நியூட்ரினோ, ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட திட்டங்களை மத்திய அரசு தமிழகத்தில் செயல்படுத்த முயன்றபோது விவசாயிகளுக்காக ம.தி.மு.க. பல்வேறு போராட்டங்களை நடத்தியுள்ளதாகவும் வைகோ குறிப்பிட்டார்.
இச்சந்திப்பின்போது ம.தி.மு.க. மாநில மருத்துவ அணிச் செயலாளர் சுப்பாராஜ், முன்னாள் எம்.எல்.ஏ. டாக்டர் சதன் திருமலைக்குமார், மாவட்டச் செயலாளர்கள் நிஜாம், சுதா பாலசுப்பிரமணியன், உதயசூரியன் உட்பட பலர் உடனிருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மக்களை நேரில் பார்க்காமல் தனி விமானம் பிடித்து ஓடியது யார்? செந்தில் பாலாஜி பதிலடி!
வெள்ளி 10, ஜூலை 2026 5:29:09 PM (IST)

யாரேனும் லஞ்சம் கேட்டால் கொடுக்காதீர்கள்.. இது விஜய் ஆட்சி - கரூரில் முதலமைச்சர் பேச்சு!
வெள்ளி 10, ஜூலை 2026 3:36:42 PM (IST)

நெல்லையப்பர் கோவிலில் ஆடிப்பூரத் திருவிழா துவக்கம்: 12-ஆம் தேதி வளைகாப்பு உற்சவம்!
வெள்ளி 10, ஜூலை 2026 8:37:22 AM (IST)

காங்கிரஸ் அமைச்சரை விடுவிக்கத் தவெக அரசு தயாரா? எடப்பாடி பழனிசாமி கேள்வி
வியாழன் 9, ஜூலை 2026 4:53:50 PM (IST)

நெல்லையில் ரூ.15,037 கோடியில் சோலார் ஆலை: முதல்வர் விஜய் முன்னிலையில் ஒப்பந்தம்
வியாழன் 9, ஜூலை 2026 3:48:41 PM (IST)

கரூர் கூட்ட நெரிசலில் பலியானோர் குடும்பங்களுக்கு அரசு வேலை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எதிர்ப்பு
வியாழன் 9, ஜூலை 2026 3:33:15 PM (IST)








