» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

திருமாவளவன் குறித்த நோபல் பரிசு கருத்தைத் திரும்பப் பெறுகிறேன்: வைகோ பேட்டி!

வெள்ளி 10, ஜூலை 2026 8:49:57 AM (IST)

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் நடைபெற்ற ம.தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டத்தில் பங்கேற்ற கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ, செய்தியாளர்களைச் சந்தித்துப் பேட்டி அளித்தார்.

ம.தி.மு.க. பொதுக்குழு முடிவின்படி தி.மு.க. கூட்டணியிலிருந்து விலகி, தமிழக வெற்றிக் கழகத்துடன் இணைந்துள்ளதாக வைகோ தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், "ஆட்சியில் பங்கேற்போம், அதேநேரம் தி.மு.க. கூட்டணியிலும் தொடருவோம் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறியது அதிர்ச்சி அளித்தது. வடதுருவமும் தென்துருவமும் எப்படிச் சேர முடியும் என்ற அர்த்தத்திலேயே அவருக்கு நோபல் பரிசு கொடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தேன்.

அவர் ஒடுக்கப்பட்ட மக்களின் நம்பிக்கை நட்சத்திரமாக, பெரிய தலைவராக வர வேண்டும் என்று 15 ஆண்டுகளுக்கும் மேலாக ஊக்கமளித்து வருகிறேன். என் சொற்கள் அவரது மனதைப் புண்படுத்தியிருந்தால், அந்த வார்த்தைகளைத் திரும்பப் பெற்றுக் கொள்கிறேன். விடுதலை சிறுத்தைகள் கட்சி மீது எவ்வித கசப்புணர்வும் கிடையாது" என்று விளக்கமளித்தார்.

தமிழகத்தில் ஊழலை ஒழிக்க முதலமைச்சர் விஜய் எடுத்து வரும் நடவடிக்கைகளால் அவரது செல்வாக்கு அதிகரித்து வருவதாகக் குறிப்பிட்ட வைகோ, ம.தி.மு.க.விலிருந்து இரண்டு எம்.எல்.ஏ.க்கள் சென்றதைப் பற்றித் தனக்குக் கவலையில்லை என்றார். மேலும், 'பம்பரம்' சின்னத்தைத் தேர்தல் ஆணையம் முடக்கவில்லை என்றும், குறிப்பிட்ட விகிதாசாரத் தொகுதிகளில் போட்டியிடும்போது அந்தச் சின்னம் மீண்டும் தங்களுக்குக் கிடைக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

நிலத்தடி நீர் மற்றும் சுற்றுச்சூழலைப் பாதிக்கும் சீமைக்கருவேல மரங்களைத் தனது உடல்நலம் பாதிக்கப்பட்டபோதும் முன்னின்று அகற்றி வருவதாகத் தெரிவித்தார். தமிழக நலன்களைக் காக்க ம.தி.மு.க. பாடுபட்டு வருவதாகவும், மீத்தேன், நியூட்ரினோ, ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட திட்டங்களை மத்திய அரசு தமிழகத்தில் செயல்படுத்த முயன்றபோது விவசாயிகளுக்காக ம.தி.மு.க. பல்வேறு போராட்டங்களை நடத்தியுள்ளதாகவும் வைகோ குறிப்பிட்டார்.

இச்சந்திப்பின்போது ம.தி.மு.க. மாநில மருத்துவ அணிச் செயலாளர் சுப்பாராஜ், முன்னாள் எம்.எல்.ஏ. டாக்டர் சதன் திருமலைக்குமார், மாவட்டச் செயலாளர்கள் நிஜாம், சுதா பாலசுப்பிரமணியன், உதயசூரியன் உட்பட பலர் உடனிருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads





Arputham Hospital




Thoothukudi Business Directory