» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கோடை விடுமுறை எதிரொலி: நெல்லை, கோவை வந்தே பாரத் ரயில்களில் ஜூன் வரை இடமில்லை!

சனி 2, மே 2026 3:41:41 PM (IST)

கோடை விடுமுறை எதிரொலியாக சுற்றுலா மற்றும் சொந்த ஊர் செல்வோரின் வருகையால் நெல்லை, நாகர்கோவில் வந்தே பாரத் உள்ளிட்ட அனைத்து ரயில்களும் ஜூன் வரை நிரம்பியுள்ளன.

பள்ளிகளுக்குக் கோடை விடுமுறை விடப்பட்டதைத் தொடர்ந்து, தமிழகத்தின் முக்கிய சுற்றுலாத் தலங்கள் மற்றும் தென் மாவட்டங்களுக்குச் செல்லும் ரயில்களில் கூட்டம் அலைமோதி வருகிறது. குறிப்பாக, சொகுசுப் பயணத்தை விரும்பும் பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள 'வந்தே பாரத்' ரயில்களில் ஜூன் முதல் வாரம் வரை இடங்கள் அனைத்தும் நிரம்பியுள்ளன.

கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் ஊட்டி, கொடைக்கானல், ஏலகிரி மற்றும் ஏற்காடு போன்ற மலைப்பிரதேசங்களுக்கு மக்கள் தங்கள் குடும்பங்களுடன் பயணிக்கத் தொடங்கியுள்ளனர். இதனால் சென்னையில் இருந்து இயக்கப்படும் சிறப்பு ரயில்கள் முதல் சாதாரண ரயில்கள் வரை அனைத்தும் நிரம்பி வழிகின்றன.

வந்தே பாரத் ரயில்களில் நிலவரம்:

முழுமையான ஏ.சி. வசதி கொண்ட வந்தே பாரத் ரயில்களில் கட்டணம் அதிகமாக இருந்தாலும், பயண நேரக் குறைவு மற்றும் சொகுசு வசதி காரணமாக மக்கள் இதில் பயணிக்க ஆர்வம் காட்டுகின்றனர்.

கோவை வந்தே பாரத்: மே 29-ம் தேதி வரை காத்திருப்போர் பட்டியல் நீள்கிறது. சதாப்தி எக்ஸ்பிரஸிலும் மே 8 வரை இடமில்லை.

நெல்லை வந்தே பாரத்: மே 16-ம் தேதி வரை அனைத்து இருக்கைகளும் முன்பதிவு செய்யப்பட்டுவிட்டன.

நாகர்கோவில் வந்தே பாரத்: மே 17-ம் தேதி வரை ஒரு இடம் கூட இல்லை.

பெங்களூரு வழித்தடம்: சென்ட்ரலில் இருந்து பெங்களூரு செல்லும் வந்தே பாரத் ரயிலில் மே 11 வரை காத்திருப்போர் பட்டியல் உள்ளது. இதேபோல் சதாப்தி, லால்பாக், பிருந்தாவன் மற்றும் காவேரி எக்ஸ்பிரஸ் ரயில்களிலும் இடமில்லை.

அதிகாரிகள் விளக்கம்: இது குறித்து ரயில்வே துறை அதிகாரிகள் கூறுகையில், "மே மாதம் இறுதி வரையில் இதே நிலைதான் நீடிக்கும். ஜூன் முதல் வாரம் பள்ளிகள் திறக்கும் வரை ரயில்களில் இடம் கிடைப்பது கடினம். காத்திருப்போர் பட்டியலும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது," எனத் தெரிவித்தனர். ரயில்களில் இடம் கிடைக்காத காரணத்தால், பயணிகள் அதிகக் கட்டணம் கொடுத்து ஆம்னி பேருந்துகளை நாடும் சூழல் ஏற்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital





Thoothukudi Business Directory