» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

நெல்லையில் 100 அடி நீளத் துணியில் தேர்தல் ஓவியம்: மாணவ, மாணவிகள் அசத்தல்!

வெள்ளி 3, ஏப்ரல் 2026 4:16:59 PM (IST)



நெல்லையில் 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஒன்றிணைந்து 100 அடி நீளத் துணியில் தேர்தல் விழிப்புணர்வு ஓவியங்களை வரைந்து அசத்தினர். 

தமிழகச் சட்டமன்றப் பொதுத்தேர்தல் வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெற உள்ளதை முன்னிட்டு, இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்திப் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

மாவட்டத் தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான இரா. சுகுமார் தலைமையில், வண்ணாரப்பேட்டை செல்லப்பாண்டியன் மேம்பாலத்தின் அருகே பிரம்மாண்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.சிவராம் ஓவியக் கலைக்கூடத்தைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஒன்றிணைந்து, 100 அடி நீள வெள்ளைத் துணியில் தேர்தல் விழிப்புணர்வு ஓவியங்களை வரைந்தனர்.

"வாக்களிப்பது நம் உரிமை, வாக்களிப்பது நம் கடமை" என்ற வாசகங்களுடன், 100 சதவீத வாக்குப்பதிவின் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் இந்த ஓவியங்கள் அமைந்திருந்தன. திருநெல்வேலியின் பாரம்பரியச் சிறப்பான பத்தமடைப் பாயில், தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள் மற்றும் மாணவர்கள் விழிப்புணர்வு ஓவியங்களை வரைந்து கவனத்தை ஈர்த்தனர்.

தொடர்ந்து, வரையப்பட்ட ஓவியங்களுடன் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள் இணைந்து மனிதச் சங்கிலி அமைத்தனர். பின்னர், அனைவரும் ஒன்றிணைந்து வாக்குப்பதிவின் அவசியம் குறித்த விழிப்புணர்வு உறுதிமொழியை எடுத்துக்கொண்டனர்.

நூறு கடந்த வாக்காளர்கள்:

நாங்குநேரி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ஏர்வாடி பகுதியில் ஒரு நெகிழ்ச்சியான விழிப்புணர்வு முயற்சி மேற்கொள்ளப்பட்டது. 107 வயதான செல்லம்மாள் மற்றும் 102 வயதான மேரி பாய் ஆகியோரின் இல்லங்களுக்குத் தேர்தல் அலுவலர்கள் நேரில் சென்றனர்.

அவர்களுக்குத் தேர்தல் நாள் அழைப்பிதழுடன், 'வாக்காளர் சீர்வரிசை' தட்டு மற்றும் விழிப்புணர்வுப் பதாகைகளை வழங்கி, ஏப்ரல் 23 அன்று தவறாமல் வாக்களிக்குமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர். இதில் சமூக நலத்துறை, வருவாய்த்துறை அலுவலர்கள் மற்றும் தன்னார்வலர்கள் பங்கேற்றனர்.

திருநெல்வேலி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் (Coca Cola), 100-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் முன்னிலையில் வாக்காளர் உறுதிமொழி எடுக்கப்பட்டது. அவர்களுக்குத் தேர்தல் நாள் குறித்த விழிப்புணர்வும் வழங்கப்பட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital





Thoothukudi Business Directory