» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

அரசு தயாரித்து கொடுத்த அறிக்கையை வாசிப்பது ஆளுநரின் கடமை: சபாநாயகர் அப்பாவு

செவ்வாய் 20, ஜனவரி 2026 3:53:55 PM (IST)

அரசின் நிறை குறைகளை பேசுவதற்கு ஆளுநர் அரசியல்வாதி அல்ல, அரசு தயாரித்து கொடுத்த அறிக்கையை வாசிப்பது ஆளுநரின் கடமை  என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டின் முதல் சட்டசபை கூட்டம் இன்று (செவ்வாய்கிழமை) காலை 9.30 மணிக்கு தொடங்கி நடைபெற்றது. இந்த நிலையில், சட்டசபையில் பேசத் தொடங்கிய ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ்த்தாய் வாழ்த்தை தொடர்ந்து தேசிய கீதம் பாடப்படவில்லை என்பதை சுட்டிக்காட்டி, தனது உரையை புறக்கணித்து வெளியேறினார். 

தொடர்ந்து. 4-வது ஆண்டாக அவர் வெளியேறி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனைத்தொடர்ந்து ஆளுநர் உரையின் தமிழாக்கத்தை சட்டசபையில் சபாநாயகர் மு.அப்பாவு வாசித்தார். இந்நிலையில் தமிழ்நாடு அரசின் உரையை வாசிக்காமல் ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியேறியது குறித்து சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது: அரசின் நிறை குறைகளைப் பேசுவதற்கு ஆளுநர் அரசியல்வாதி அல்ல. 

ஆளுநர் மாளிகையை விட்டு வெளியேறி, ஒரு கட்சியில் சேர்ந்துவிட்டு அதையெல்லாம் பேசலாம். ஆளுநர் அவருக்கு உரிய பணியை அவர் செய்ய வேண்டும். நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி உரையை இப்படி செய்வார்களா..? தமிழ்நாடு சட்டசபை வரலாற்றில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து, நிறைவாக தேசிய கீதம் பாடப்படும். இந்த மரபு ஒருபோதும் மாற்றப்படாது. சபாநாயகர் பேசும் போது பேரவையில் மற்றவர்களின் மைக் அணைக்கப்படுவது வழக்கம்தான். தயவு செய்து உங்கள் கடமையை செய்யுங்கள் என்று மட்டும்தான் ஆளுநரிடம் கூறினேன். 

அரசு தயாரித்து கொடுத்த அறிக்கையை வாசிப்பது ஆளுநரின் கடமை. ஜனநாயக கடமையை பின்பற்றி ஆளுநருக்கு அழைப்பு விடுத்திருந்தோம். நாளை (ஜன.21ம் தேதி) முன்னாள் எம்.எல்.ஏக்கள் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கப்படும். ஜனவரி 22, 23ம் தேதிகளில் பேரவைக் கூட்டம் முழுமையாக நடைபெறும், ஆளுநர் உரை மீது விவாதம் நடக்கும். 24-ஆம் தேதி முதல்-அமைச்சர் அதற்கு பதிலளிப்பார். இவ்வாறு அவர் கூறினார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads






Arputham Hospital



Thoothukudi Business Directory