» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தமிழகத்தில் ரூ.50,000க்கு மேல் கொண்டு செல்ல தடை இல்லை: வணிகர் சங்கம் நன்றி!!
திங்கள் 22, ஏப்ரல் 2024 12:34:28 PM (IST)
தமிழகத்தில் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் பணம் கொண்டு செல்ல தடையில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளதற்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு நன்றி தெரிவித்துள்ளது.
இது குறித்து தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம். விக்கிரமராஜா தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதசாகுவுக்கு நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில் "பாராளுமன்ற தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலாக்கம் காரணமாக வணிகர்கள், பொதுமக்கள், விவசாயிகள் மிகப்பெரும் பாதிப்புக்கு உள்ளாவதை தேர்தல் ஆணையரிடம் நேரில் விளக்கி கூறி, வாக்களிப்பு நடந்து முடிந்தவுடன், ஏப்ரல் 20-ந்தேதி முதல் ஜூன் 4-ந்தேதி வரை தேர்தல் விதிமுறைகள் பின்பற்றப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்ததை, மறுபரிசீலனை செய்யக்கோரியும், தமிழகத்தைப் பொறுத்தவரை தேர்தல் நடந்து முடிந்தவுடன், நடத்தை விதிமுறைகளை தேர்தல் நடைபெறும் இதர மாநில எல்லைகளில் மட்டுமே பின்பற்றிட அறிவுறுத்திட வேண்டும் எனும் பேரமைப்பின் கோரிக்கையை ஏற்று, பறக்கும் படைகள் திரும்பப் பெறப்படுவதாக அறிவித்து, மாநில எல்லைகளில் மட்டுமே, நடத்தை விதிமுறைகள் பின்பற்றப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருப்பது மகிழ்ச்சிக்குரிய செய்தியாக உள்ளது.
இதனால், வணிகர்கள் இயல்பாக வணிகத்தை மேற்கொள்ளவும், அரசுக்கான வரி வருவாயையை உறுதி செய்திடவும் வழிவகுக்கும் என்பதனை மனதார வரவேற்று தேர்தல் ஆணையத்திற்கும் தேர்தல் பணிகளில் துணையிருந்து பாதுகாப்பு அளித்த போலீசாருக்கும், தேர்தல் பணியாளர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.இவ்வாறு கூறியுள்ளார்.