» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

செல்போன் தகராறில் பயங்கரம்; வாலிபர் சரமாரி வெட்டிக்கொலை: நண்பர் கைது- வீடு சூறை!!

செவ்வாய் 9, ஏப்ரல் 2024 8:30:08 AM (IST)

நெல்லை அருகே செல்போன் தகராறில் கிராம கலையரங்கத்தில் வாலிபர் சரமாரி வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவரது நண்பரை போலீசார் கைது செய்தனர்.

நெல்லையை அடுத்த கிருஷ்ணாபுரம் அருகே நொச்சிகுளம் கிராமத்தில் உள்ள கலையரங்கில் நேற்று காலையில் வாலிபர் ஒருவர் சரமாரியாக அரிவாளால் வெட்டப்பட்டு உடலில் பலத்த ரத்தக் காயங்களுடன் பிணமாக கிடந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பகுதி மக்கள் உடனடியாக இதுபற்றி சிவந்திப்பட்டி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். 

பின்னர் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், இறந்து கிடந்தவர் நொச்சிகுளத்தை சேர்ந்த ராஜ் மகன் அன்பு (32) என்பது தெரியவந்தது. எலக்ட்ரீசியனான அவர் நேற்று முன்தினம் அதே பகுதியை சேர்ந்த வேலு மகன் பாலமுருகன் (19) என்பவருடன் சேர்ந்து கலையரங்கம் பகுதியில் பேசிக்கொண்டு இருந்ததும் தெரியவந்தது. 

இதனையடுத்து பாலமுருகனை போலீசார் பிடித்து தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அன்புவும், பாலமுருகனும் நண்பர்கள். அவர்கள் ஒன்றாக வேலைக்கு சென்று வந்துள்ளனர். நேற்று முன்தினம் இரவு அவர்கள் இருவரும் கலையரங்கத்தில் வைத்து மது குடித்துக்கொண்டு இருந்தனர்.

அப்போது பாலமுருகனின் செல்போனை அன்பு எடுத்து மறைத்து வைத்து விளையாடி உள்ளார். இதனால் ஏற்பட்ட தகராறில் ஆத்திரம் அடைந்த பாலமுருகன் தனது வீட்டுக்கு சென்று அரிவாளை எடுத்துவந்து அன்புவை கழுத்து, தாடை பகுதியில் சரமாரியாக வெட்டிக் கொலை செய்தது தெரியவந்தது.

பின்னர் பாலமுருகனை போலீசார் கைது செய்தனர். அவரை பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதற்கிடையே, அன்புவின் ஆதரவாளர்கள் ஆத்திரத்தில் பாலமுருகன் வீட்டை அடித்து சூறையாடினர். மதுபோதையில் ஆத்திரத்தில் வாலிபரை அவரது நண்பரே வெட்டிக் கொலை செய்ததும், பதிலுக்கு நண்பரின் வீடு சூறையாடப்பட்டதும் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads








Arputham Hospital




Thoothukudi Business Directory