» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

காங்.தேர்தல் அறிக்கைதான் நாட்டை காக்கும் கதாநாயகன்: முதல்வர் ஸ்டாலின் புகழாரம்

திங்கள் 8, ஏப்ரல் 2024 10:35:35 AM (IST)

காங்கிரஸ் தேர்தல் அறிக்கைதான் நாட்டை காக்கும் கதாநாயகனாக விளங்குகிறது என்று புதுச்சேரியில் நடந்த பிரச்சார பொதுக்கூட்டத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

புதுச்சேரி மக்களவை தொகுதியில், இண்டியா கூட்டணியில் இருந்து காங்கிரஸ் சார்பில் முன்னாள் முதல்வர் வைத்திலிங்கம் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து புதுச்சேரியில் நேற்று நடந்த பிரச்சார பொதுக் கூட்டத்தில் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் பேசியதாவது: புதுவையில் கடந்த ஆட்சியில் முதல்வராக இருந்த நாராயணசாமிக்கு ஒத்துழைப்பு தராமல் நிர்வாகத்தை சீர்குலைத்தவர் துணை நிலை ஆளுநராக இருந்த கிரண்பேடி. 

இப்படி, தமிழகத்திலும் ஓர் ஆளுநர் இருக்கிறார். இருவரும் ஐபிஎஸ் ஆக இருந்தவர்கள்தான். காவல் துறையில் பதவிக் காலம் முடிந்ததும் இவர்களை எல்லாம் ஆளுநர் ஆக்கிவிடுகின்றனர். இவர்கள் விளம்பரத்துக்காக அரசியலமைப்பு சட்டத்தை மீறி பாஜக ஏஜென்ட் போலவே செயல்படுகின்றனர். ஆளுநர்கள் தொல்லை கொடுப்பது, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு மட்டுமல்ல. 

புதுச்சேரியில் ஆளும் பாஜக கூட்டணி கட்சி முதல்வர் ரங்கசாமிக்கும் ஏகப்பட்ட நெருக்கடி. எல்லோரும் டெல்லிக்குகீழ் இருக்க வேண்டும் என்பதுதான் பாஜகவின் கொள்கை. அதனால்தான், கூட்டணி அரசாக இருந்தாலும், புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கொடுக்காமல் தன் கைப்பிடியிலேயே வைத்திருக்கிறது பாஜக. ரங்கசாமியும் அவர்களுக்கு கைப்பாவையாக இருக்கிறார். அவரை டம்மியாக உட்காரவைத்து ஆட்சி நடத்துகிறது பாஜக.

நாடு முழுவதும் பாஜக ஆட்சியில் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது. கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து ஒரு சிறுமி படுகொலை செய்யப்பட்டார். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தபோதிலும், பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படவில்லை. சில கார்ப்பரேட் நிறுவனங்கள் மட்டுமே லாபம் ஈட்டின. மக்களுக்காக விலையை குறைக்காமல், ஒரு சிலர் மட்டும் லாபம் ஈட்ட வேண்டும் என நினைக்கும் பாஜக ஆட்சியை அப்புறப்படுத்த வேண்டும்.

சாதி, மதத்தின் பெயரால் தேர்தல் பிரச்சாரம் செய்கிறார் பிரதமர் மோடி. சமூக நீதி, இடஒதுக்கீட்டை பாதுகாப்பேன் என அவர் ஒருநாளும் சொன்னது இல்லை. 2006-ல் திமுக தேர்தல் அறிக்கை எப்படி கதாநாயகனாக இருந்ததோ, அதுபோல, தற்போது காங்கிரஸ் தேர்தல் அறிக்கைதான் நாட்டை காக்கும் கதாநாயகனாக விளங்குகிறது. தமிழகம், புதுச்சேரியின் 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம். மத்தியில் இண்டியா கூட்டணிதான் ஆட்சிக்கு வரும்.

மக்களின் நீண்டகால கோரிக்கையை ஏற்று, புதுச்சேரிக்கு முழு மாநில அந்தஸ்து பெற்றுத் தரப்படும். மூடப்பட்டுள்ள ரேஷன் கடைகள் மீண்டும் திறக்கப்படும். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.


மக்கள் கருத்து

ஓட்டு போட்ட முட்டாள்Apr 8, 2024 - 11:40:22 AM | Posted IP 162.1*****

உருட்டுகளின் தலைவன் தத்தி சுடலை

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads








Arputham Hospital




Thoothukudi Business Directory