» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
நகை கடைகளுக்கு கூரியரில் அனுப்பிய ரூ.1.92 கோடி தங்கம், வைரம் பறிமுதல்
வெள்ளி 5, ஏப்ரல் 2024 4:29:32 PM (IST)
திருவள்ளூர் அருகே நகை கடைகளுக்கு கூரியரில் அனுப்பி வைக்கப்பட்ட, 1.92 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க, வைர நகைகளை, பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டத்தில் பணம், பரிசுப் பொருள் வினியோகத்தை தடுக்கும் வகையில், 90 பறக்கும் படைகள் மற்றும் 90 நிலை கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தக் குழுக்கள் மாவட்டம் முழுதும் வாகன சோதனை நடத்தி, உரிய ஆவணம் இன்றி கொண்டு செல்லப்படும் பணம், நகைகளை பறிமுதல் செய்து, அரசு கருவூலத்தில் ஒப்படைத்து வருகின்றன.
நேற்று முன்தினம், பிரவீன் தலைமையிலான தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவினர், சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலை பாண்டூர் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது, சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த 'பொலீரோ' வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனர்.
சென்னையைச் சேர்ந்த பி.வி.சி.லாஜிஸ்டிக் நிறுவனத்தின் வாயிலாக, பிரபல நகை கடைகளுக்கு கூரியர் வாயிலாக, தங்கம், வெள்ளி மற்றும் வைர நகைகளை கொண்டு சென்றது தெரிந்தது. கார் ஓட்டுனர் கார்த்திக் குமாரிடம் விசாரித்த போது, அனுமதி இல்லாமல் கொண்டு செல்வது தெரிந்தது.
இதையடுத்து பறக்கும் படையினர், காரில் இருந்த 2,775 கிராம் தங்கம், 14,021 கிராம் வெள்ளி மற்றும் 0.88 காரட் வைரம் ஆகியவற்றை பறிமுதல் செய்து, திருவள்ளூர் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் தனலட்சுமியிடம் ஒப்படைத்தனர். பறிமுதல் செய்யப்பட்ட நகைகளின் மதிப்பு 1.92 கோடி ரூபாய்.