» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
10 இலட்சத்திற்கு மேல் கைப்பற்றப்பட்டால் தகவல் தெரிவிக்க வேண்டும் : ஆட்சியர்
வியாழன் 4, ஏப்ரல் 2024 5:36:40 PM (IST)
10 இலட்சத்திற்கு மேல் கைப்பற்றப்பட்டால் வருமானவரித்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று குமரி மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் தெரிவித்தார்.
குமரி மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர் ஆட்சியர் அலுவலக வருவாய் கூட்டரங்கில் இன்று (04.04.2024) தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள நிலையான கண்காணிப்பு குழு மற்றும் பறக்கும் படையினருடன் கலந்தாலோசனை மேற்கொண்டு தெரிவிக்கையில்- இந்தியதேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலுங்கிணங்க கன்னியாகுமரி பாராளுமன்ற பொதுத்தேர்தல் மற்றும் விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தல் வரும் ஏப்ரல் 19ம் தேதி நடைபெறுவதையொட்டி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அனைத்து முன்னேற்பாடு பணிகளும் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
அதன் ஒரு பகுதியாக இன்று தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள நிலையான கண்காணிப்பு குழு மற்றும் பறக்கும் படை பிரிவில் ஈடுப்பட்டுள்ள அலுவலர்கள் மற்றும் காவலர்களுக்கு பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக பறக்கும் படையினர் எந்தவித அச்சுறுத்தலுக்கும் இடம்தரமால் அனைத்து தரப்பட்ட வாகனங்களையும் தீவிரமாக கண்காணிக்க வேண்டும்.
மேலும் இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின் படி வாகனங்களிலிருந்து கைப்பற்றப்பட்ட பணம், நகைகள் குறித்த அனைத்து தகவல்களையும் உடன்குடன் குறிப்பிட்ட அலுவலர்கள் மற்றும் தேர்தல் கட்டுப்பாட்டு அலுவலகத்திற்கு தெரிவிக்க வேண்டும். 10 இலட்சத்திற்கு மேல் வாகனத்திலிருந்து கைப்பற்றபட்டால் வருமானவரித்துறைக்கு தகவல் தெரிவித்து, முறையாக மாவட்ட கருவூலத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும். தேர்தல் நாள் நெருங்குவதால் வாகன சோதனையினை தீவிரப்படுத்திட வேண்டுமென அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி பாராளுமன்ற பொதுத்தேர்தல் மற்றும் விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் துண்டு பிரசுரம் வெளியிடும் போது கண்டிப்பாக அச்சகத்தின் பெயரினை பதிவு செய்ய வேண்டும். தவறும் பட்சத்தில் குறிப்பிட்ட வேட்பாளர்கள் மற்றும் அச்சகத்தின் மீது வழக்கு பதிவு செய்யப்படும். இவ்வாறு மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர், தெரிவித்தார்கள்.
கூட்டத்தில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெ.பாலசுப்பிரமணியம், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியானர்கள் கு.சுகிதா (பொது), செந்தூர் ராஜன் (தேர்தல்), கண்காணிப்பு அலுவலர் மற்றும் துணை இயக்குநர் (வேளாண்மை) வாணி, தேர்தல் செலவின கணக்கர் செல்வகுமார் உட்பட பலர் உள்ளார்கள்.