» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
ராமநாதபுரம் தொகுதியில் குழப்பம் உறுதி: 5 பன்னீர் செல்வங்களின் வேட்புமனு ஏற்பு!
வியாழன் 28, மார்ச் 2024 3:38:55 PM (IST)
ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பெயரில் 5 பேர் போட்டியிடுவதால் மக்கள் குழப்பம் அடையும் சூழல் ஏற்பட்டுள்ளது.
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மக்களவைத் தேர்தலில் ஆதரவு தெரிவித்துள்ளார். அதிமுகவின் சின்னம், கொடி உள்ளிட்டவை பயன்படுத்த ஓபிஎஸ்ஸுக்கு நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில், பாஜக கூட்டணியில் ராமநாதபுரம் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடுகிறார்.
இவரை எதிர்த்து திமுக கூட்டணிக் கட்சியான முஸ்லீம் லீக்கின் மக்களவை உறுப்பினர் நவாஸ் கனி மீண்டும் களமிறங்கிறார். தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை ஓ.பன்னீர்செல்வம் திங்கள்கிழமை தாக்கல் செய்த நிலையில், அவரின் பெயரில் மற்றொருவர் வேட்புமனு தாக்கல் செய்து அதிர்ச்சி கொடுத்தார்.
தொடர்ந்து, மேலும் மூன்று பன்னீர்செல்வம் தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்து பரபரப்பை ஏற்படுத்தினர். ஓபிஎஸ்ஸுக்கு கிடைத்த ஆதரவை கண்டு எடப்பாடி பழனிசாமி வேண்டுமென்றே பல்வேறு பகுதிகளில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் என்று பெயருடைய நபர்களை வரவழைத்து வேட்புமனு தாக்கல் செய்ய வைத்துள்ளதாக ஓபிஎஸ்ஸின் மகன் ஜெயபிரதீப் குற்றம்சாட்டி இருந்தார்.
இந்த நிலையில், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்பட 5 பன்னீர்செல்வத்தின் வேட்புமனுக்களையும் தேர்தல் அதிகாரி ஏற்றுள்ளதால் போட்டி உறுதியாகியுள்ளது. ஒரே பெயருடைய 5 பேர் சுயேச்சையாக வெவ்வேறு சின்னத்தில் நிற்கும் பட்சத்தில் வாக்குகள் சிதறும் சூழல் ஏற்பட்டுள்ளது.