» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிக்க பரிந்துரைகள்: முதல்வரிடம் நீதிபதி சந்துரு குழு அளித்தது!
திங்கள் 27, ஜூன் 2022 12:16:51 PM (IST)
ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிப்பது பற்றிய பரிந்துரைகளை முதல்வர் ஸ்டாலினிடம் ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி கே.சந்துரு தலைமையிலான குழு இன்று அளித்துள்ளது.
ஆன்லைன் ரம்மி தடை அவசர சட்டத்தில் இடம்பெற வேண்டியவற்றை பரிந்துரைகளாக வல்லுனர் குழு அளித்தது. அவசர சட்டம் பற்றி மாலை அமைச்சரவை ஆலோசிக்க உள்ள நிலையில் ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு எதிராக அவசர சட்டத்தை வகுக்கத் தேவையான பரிந்துரைகளை வல்லுனர் குழு அளித்துள்ளது. இதையடுத்து குழுவின் பரிந்துரை அறிக்கையை ஆய்வு செய்து விரைவில் அவசர சட்டம் பிறப்பிக்க வாய்ப்பு உள்ளது.
ஆன்லைன் சூதாட்டத் தடை அவசர சட்டத்தை பிறப்பிப்பது குறித்து பரிந்துரைக்க வல்லுனர் குழுவை தமிழக அரசு அண்மையில் அமைத்தது. ஓய்வு பெற்ற சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி கே.சந்துரு தலைமையிலான இந்தக் குழுவில் ஐஐடி தொழில்நுட்ப வல்லுநா் சங்கரராமன், ஸ்நேகா அமைப்பின் நிறுவனரும், உளவியலாளருமான லட்சுமி விஜயகுமாா், காவல் துறை கூடுதல் இயக்குநா் வினித் தேவ். வான்கடே ஆகியோா் இடம்பெற்றுள்ளனர்.
அரசு அமைத்துள்ள குழுவானது தனது பரிந்துரைகளை இரண்டு வாரங்களில் அளிக்க வேண்டும் என்றும் குழுவின் பரிந்துரை அறிக்கையின் அடிப்படையில் அவசரச் சட்டம் விரைவில் இயற்றப்படும் என்றும் தமிழக அரசு தெரிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.