» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மாணவி மரணம்: குற்றவாளிகளைக் கைது செய்யக் கோரி 9 மணி நேரம் சாலை மறியல்!

வெள்ளி 13, மார்ச் 2026 8:13:33 AM (IST)



வேடநத்தம் கிராமத்தைச் சேர்ந்த பிளஸ்-2 மாணவி உயிரிழந்த சம்பவத்தில், குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்ய வலியுறுத்தி தூத்துக்குடி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் 9 மணி நேரத்திற்கும் மேலாகப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாணவி காணாமல் போனது குறித்து அவரது உறவினர்கள் முதலில் குளத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கச் சென்றுள்ளனர். அங்கிருந்தவர்கள் விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்குச் செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளனர். அதன்படி, புதன்கிழமை காலை மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கச் சென்றபோது, ஆய்வாளர் பிரவீனா புகாரைப் பெறாமல் பெற்றோரை அவதூறாகப் பேசி அலைக்கழித்ததாகக் கூறப்படுகிறது. 

இந்நிலையில், நேற்று முன்தினம் காட்டுப்பகுதியில் மாணவியின் உடல் மீட்கப்பட்டது. காவல்துறையின் அலட்சியத்தைக் கண்டித்தும், குற்றவாளிகளைக் கைது செய்யக் கோரியும் குறுக்குச்சாலை சந்திப்பில் நேற்று உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். காலை தொடங்கி சுமார் 9 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்தப் போராட்டத்தால் தூத்துக்குடி துறைமுகத்திற்குச் சென்ற கனரக வாகனங்கள் சுமார் 3 கி.மீ. தூரத்திற்கு அணிவகுத்து நின்றன. 

மதுரை, கோவில்பட்டி, சிவகாசி உள்ளிட்ட நகரங்களுக்குச் செல்லும் பேருந்துகள் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டன. நெல்லை சரக டி.ஐ.ஜி சரவணன் மற்றும் மாவட்ட எஸ்.பி. மதன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தியும், மக்கள் கலைந்து செல்ல மறுத்தனர்.

மாணவியின் பெற்றோரை அவதூறாகப் பேசி அலைக்கழித்த குற்றச்சாட்டின் அடிப்படையில், விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் பிரவீனாவைப் பணியிடை நீக்கம் (Suspend) செய்து நெல்லை சரக டி.ஐ.ஜி சரவணன் அதிரடி உத்தரவு பிறப்பித்தார். அதிகாரியின் மீதான இந்த நடவடிக்கை போராட்டக்காரர்களிடையே சற்று நிம்மதியை ஏற்படுத்தியது.

அப்பகுதியில் நிலவும் பதற்றத்தைத் தணிக்கவும், மேற்கொண்டு அசம்பாவிதங்கள் தவிர்க்கவும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 3 கூடுதல் எஸ்.பி.க்கள், 5 டி.எஸ்.பி.க்கள் தலைமையில் 200-க்கும் மேற்பட்ட போலீசார் வேடநத்தம் மற்றும் குறுக்குச்சாலை பகுதிகளில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.


மக்கள் கருத்து

srinivasanMar 13, 2026 - 09:49:03 AM | Posted IP 172.7*****

it is totally unacceptable even though we are living in development state and development district like tuticorin...................

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital





Thoothukudi Business Directory