» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தன்னம்பிக்கை, மன தைரியம் இருந்தால் பெண்கள் எதையும் சாதிக்கலாம்: மேயர் ஜெகன் பெரியசாமி பேச்சு

ஞாயிறு 8, மார்ச் 2026 1:22:22 PM (IST)



தன்னம்பிக்கையும் மன தைரியமும் இருந்தால் பெண்கள் எதையும் சாதிக்கலாம் என்று தூத்துக்குடி மாநகராட்சியில் நடைபெற்ற உலக மகளிர் தின விழாவில் மேயர் ஜெகன் பெரியசாமி பேசினார். 

தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் நடைபெற்ற உலக மகளிர் தின விழாவிற்கு மாநகராட்சி ஆணையர் பிரயங்கா தலைமை வகித்தார். உதவி பொறியாளர் அனுசௌந்தர்யா வரவேற்புரையாற்றினார். பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற பெண்களுக்குப் பரிசுகளை வழங்கி மேயர் ஜெகன் பெரியசாமி பேசியதாவது: தூத்துக்குடி மாநகராட்சியில் ஆண்களுக்கு நிகராக 32 பெண் மாமன்ற உறுப்பினர்கள் சிறப்பாகப் பணியாற்றி வருகின்றனர். 

நகரில் பெண்கள் அச்சமின்றி நடமாடுவதை உறுதி செய்யப் பல்வேறு இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு நள்ளிரவில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் வாகனப் பேரணியின் போது, பெண்கள் அதிக அளவில் இருசக்கர வாகனங்களில் பாதுகாப்பாகச் சென்று வந்ததைக் கண்டேன். இதுவே நகரின் பாதுகாப்பு நிலைக்குச் சான்று.

முன்பு 3 பூங்காக்கள் மட்டுமே இருந்த தூத்துக்குடியில், தற்போது 53 புதிய பூங்காக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. வ.உ.சி கல்லூரி அருகே நமக்கு நாமே திட்டத்தின் கீழ், கனிமொழி எம்.பி. அவர்களின் ஆலோசனையின்படி பெண்களுக்கெனத் தனிப் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. அங்கு யோகா, ஜிம் மற்றும் நடன வகுப்புகள் நடைபெறுகின்றன. அதேபோல், மாநகராட்சியின் 21 பள்ளிகளிலும் பெண் தலைமை ஆசிரியர்களே பணியாற்றி வருகின்றனர். சமீபத்தில் பணியமர்த்தப்பட்ட 67 பணியாளர்களில் பெரும்பாலானோர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பெண்கள் எதையும் சாதிக்க முடியும் என்ற மன உறுதியுடன் செயல்பட வேண்டும். உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க மாநகராட்சி ஏற்படுத்தியுள்ள பூங்காக்கள் மற்றும் விளையாட்டுத் திடல்களைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தூத்துக்குடியை மாசு இல்லாத நகரமாக மாற்ற நாம் அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்றுவோம். இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து மேயர் கேக் வெட்டி அனைவருக்கும் வழங்கினார். விழாவில் பெண்களின் ஆரோக்கியம் குறித்து ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் செல்வ சுந்தர வினோஜின், நிதி மேம்பாடு குறித்து வங்கி மேலாளர் ரத்தினவள்ளி, பெண்களுக்கான சட்டங்கள் குறித்து சிவிஜா ஆகியோர் விழிப்புணர்வு உரையாற்றினர்.

விழாவில் மண்டலத் தலைவர்கள் கலைச்செல்வி, அன்னலட்சுமி, நகர் நல அலுவலர் சங்கர்மணி, உதவி செயற்பொறியாளர்கள் முனீர் அகமது, ராஜேஷ்கண்ணா மற்றும் மாநகராட்சி அதிகாரிகள், மாமன்ற உறுப்பினர்கள், தூய்மைப் பணியாளர்கள் உட்படப் பலர் கலந்து கொண்டனர். சுகாதார ஆய்வாளர் அழகுலட்சுமி நன்றியுரையாற்றினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital






Thoothukudi Business Directory