» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் புதிதாக கப்பல் கட்டுமான நிறுவனம்: தமிழ்நாடு அரசுடன் இணைந்து அமைப்பு!

வெள்ளி 30, ஜனவரி 2026 8:16:23 AM (IST)

தூத்துக்குடியில் உள்ள வ.உ.சி. துறைமுகத்தில் புதிதாக கப்பல் கட்டுமான நிறுவனம் ஒன்று தமிழ்நாடு அரசுடன் இணைந்து அமைக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் நாட்டின் 12 முன்னனி துறைமுகங்களில் ஒன்றாக அமைந்துள்ளது. தமிழ்நாட்டின் 2-வது பெரிய துறைமுகம் மற்றும் நாட்டின் 3-வது பெரிய கொள்கலன் துறைமுகமாக வ.உ.சி. துறைமுகம் விளங்குகிறது.

இது அமெரிக்கா, சீனா, ஐரோப்பா, இலங்கை மற்றும் மத்திய தரைக்கடல் நாடுகளுக்கு சேவைகளைக் கொண்டுள்ளது. 1974-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் வ.உ.சி. துறைமுகம் முற்றிலும் உள்நாட்டு முயற்சியில் அமைக்கப்பட்ட செயற்கை துறைமுகமாகும்.

நாட்டில் கொல்கத்தா, கொச்சி, மும்பை, கோவா, விசாகப்பட்டினம் போன்ற துறைமுக நகரங்களில் 30 கப்பல் கட்டுமான நிறுவனங்கள் அமைக்கப்பட்டு வணிகம் மற்றும் கப்பல்படைக்கு தேவையான கப்பல்கள் கட்டப்பட்டு வருகிறது. சென்னையில் லார்சன் மற்றும் டுப்ரோ (எல் அன்ட் டி) என்ற தனியார் நிறுவனம் சார்பில் எண்ணூர் அருகே காட்டுப்பள்ளியில் கப்பல் கட்டுமான நிறுவனம் உள்ளது.

கடந்த செப்டம்பர் மாதம் தூத்துக்குடியில் புதிதாக கப்பல் கட்டும் நிறுவனத்தை அமைக்க மத்திய அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதனை தொடர்ந்து தமிழ்நாடு அரசின் சிப்காட் நிறுவனத்துடன் இணைந்து வ.உ.சி. துறைமுகம் புதிய கப்பல் கட்டும் தளத்தை அமைக்க திட்டமிட்டுள்ளது. தலா 50 சதவீத பங்குகளுடன் இணைந்து கூட்டு நிறுவனமாக இது உருவாக்கப்பட்டுள்ளது.

தேசிய கப்பல்கட்டுதளம் மற்றும் கனரக தொழிற்சாலை என்ற பெயரில் சிறப்பு நோக்க நிறுவனமாக பதிவிடப்பட்டுள்ளது. இதன்மூலம் நாட்டின் வர்த்தக கப்பல் கட்டுமானம் மற்றும் கப்பல் பழுதுபார்ப்பு சூழலை வலுப்படுத்தப் முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் கடல் சார் அடித்தள வசதிகளை ஆழப்படுத்தவும் மத்திய அரசு ஆதரவுடன் செயல்படுத்த இந்த முயற்சி துணைபுரியும் என கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து வ.உ.சி. துறைமுகத்தின் ஆணைய தலைவர் சுசாந்த குமார் புரோகித், "இந்த கூட்டு முயற்சி, வ.உ.சி. துறைமுகத்துக்கும் இந்தியாவின் கடல்சார் கனவுகளுக்கும் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் முக்கிய மைல்கல்லாகும்” என்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital




CSC Computer Education



Thoothukudi Business Directory