» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

இரட்டைக்கொலை வழக்கு ஆவணங்களை திருத்தியது உண்மைதான்: சப்-இன்ஸ்பெக்டர் திடீர் ஒப்புதல்

வெள்ளி 30, ஜனவரி 2026 8:12:55 AM (IST)



சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் ஆவணங்கள் திருத்தப்பட்டது உண்மைதான் என கைதான சப்-இன்ஸ்பெக்டர் ரகு கணேஷ் மதுரை நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த வியாபாரி ஜெயராஜ், அவருடைய மகன் பென்னிக்ஸ் ஆகியோரை கடந்த 2020-ம் ஆண்டில் போலீசார் விசாரணைக்கு அழைத்துச்சென்று தாக்கியதில் படுகாயம் அடைந்த இருவரும் அடுத்தடுத்து இறந்தனர்.

இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரித்தது. அப்போதைய சாத்தான்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன் உள்பட 9 போலீசார் கைதாகி மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

இந்த வழக்கு மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. போலீஸ்காரர்கள் உள்பட பல்வேறு சாட்சிகள் தங்களது சாட்சியங்களை பதிவு செய்துவிட்டனர். சி.பி.ஐ. விசாரணை அதிகாரியிடம் குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் குறுக்கு விசாரணை நடத்தி முடித்தனர்.

இதனால் இந்த வழக்கு விசாரணை இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. தற்போது குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் நீதிபதி விசாரணை நடத்தி வருகிறார்.

இந்தநிலையில் இந்த வழக்கு நேற்று நீதிபதி முத்துக்குமரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன் உள்ளிட்ட 9 போலீசாரும் ஆஜராகி இருந்தனர். அவர்களிடம் நீதிபதி பல்வேறு கேள்விகளை எழுப்பினார். இதற்கு பதில் அளித்தனர்.

சப்-இன்ஸ்பெக்டர் ரகு கணேசிடமும் விசாரணை நடத்தப்பட்டு உள்ளது. ஜெயராஜ், பென்னிக்ஸ் இறந்த சம்பவத்தில் பல்வேறு ஆவணங்கள் திருத்தம் செய்த சம்பவத்தில் உங்களுக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கு பதில் என்ன? என நீதிபதி கேட்டுள்ளார்.

அதற்கு ரகு கணேஷ், ஆவணங்களை திருத்தியது உண்மைதான். இன்ஸ்பெக்டரின் அறிவுறுத்தலின்பேரில்தான் அவ்வாறு நடந்தது என கூறியுள்ளார். இதன்மூலம் குற்றச்சம்பவங்களில் போலீசார் ஈடுபட்டது உறுதியாகி உள்ளதாக கோர்ட்டு வட்டாரங்கள் தெரிவித்தன. இதையடுத்து குற்றம் சாட்டப்பட்ட நபர்களிடம் நடத்தப்படும் விசாரணையை இன்றைக்கும் (வெள்ளிக்கிழமை) ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital

CSC Computer Education







Thoothukudi Business Directory