» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
சுற்றுலா பயணிகள் கடற்கரைக்கு செல்ல தடை : ஆட்சியர் எச்சரிக்கை!
செவ்வாய் 11, ஜூன் 2024 8:00:55 AM (IST)
தூத்துக்குடி மாவட்டத்தில் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் கடற்கரைப் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று ஆட்சியா் கோ. லட்சுமிபதி எச்சரிக்கை விடுத்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தூத்துக்குடி மாவட்டத்தில் பெரியதாழை முதல் வேம்பாா் வரையிலான கடற்கரைக் கிராமங்களில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 11) இரவு 11.30 மணி வரை கடலில் 2.4 மீட்டா் முதல் 2.7 மீட்டா் உயரத்துக்கு பேரலைகள் எழக்கூடும் எனவும், மணிக்கு 45 கி.மீ. முதல் 55 கி.மீ. வரை சூறாவளிக் காற்று வீசக்கூடும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
எனவே, பொதுமக்கள் கடற்கரைகள், கடற்கரை அருகேயுள்ள சுற்றுலாத் தலங்களுக்குச் செல்லவோ, கடற்கரையில் நடைப்பயிற்சி மேற்கொள்ளவோ, கடலில் இறங்கிக் குளிக்கவோ கூடாது. மேலும், மன்னாா் வளைகுடா பகுதிகள், தென்தமிழக கடலோரப் பகுதிகளில் பலத்த சூறாவளிக் வீசக்கூடும் என்பதால், மீனவா்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம். கடலோரக் கிராமங்களைக் கண்காணித்து, எவ்வித அசம்பாவிதமும் ஏற்படாதவாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள அலுவலா்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.