» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி அற்புதம் மருத்துவமனையில் வெப்ப அலை, தீ தடுப்பு ஒத்திகை
வியாழன் 9, மே 2024 10:38:31 AM (IST)
தூத்துக்குடி அற்புதம் மருத்துவமனையில் தீயணைப்பு துறை சார்பில் வெப்ப அலை மற்றும் தீத்தடுப்பு ஒத்திகை நடந்தது.
தமிழகத்தில் தற்போது நிலவி வரும் வெப்ப அலையில் இருந்து பொதுமக்களை காக்கும் வகையில், தமிழ்நாடு அரசு உத்தரவின் பேரில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் தீத்ததடுப்பு ஒத்திகை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தூத்துக்குடி தேவர்புரம் ரோட்டில் இயங்கி வரும் அற்புதம் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் வெப்பலை மற்றும் தீத்தடுப்பு விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது.
உதவி மாவட்ட தீயணைப்பு அலுவலரும் தூத்துக்குடி நிலைய அதிகாரியுமான ந.நட்டார் ஆனந்தி, தீயணைப்பு நிலைய பணியாளர்கள் கலந்து கொண்டு தீவிபத்து ஏற்பட்டால் தீத்தடுப்பு கருவிகளை எப்படி கையாள்வது, இதுபோன்ற அவசர காலத்தில் மருத்துவமனையில் இருந்து நோயாளிகளை எவ்வாறு பாதுகாப்பாக வெளியே கொண்டு வருவது என்பது குறித்து மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்களுக்கு செயல்முறை விளக்கம் அளித்தனர்.
இந்நிகழ்ச்சியில் அற்புதம் மருத்துவமனை நிர்வாக அதிகாரி ஜெபன், மேலாளர் ரூபன், மற்றும் தீயணைப்பு வீரர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.