» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி கடலோரப் பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை
சனி 4, மே 2024 11:52:54 AM (IST)
தூத்துக்குடியில் கடல் சீற்றம் தொடர்பாக கடற்கரையோர மீனவ மக்களுக்கு மீன்வளத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தெற்கு ஆந்திரா கடலோர பகுதியில் சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 58 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் தொடர்ச்சியாக தென் தமிழக கடல் பகுதியில் கடல் சீற்றமாக காணப்படுகிறது. இதன் காரணமாக இன்று (04/05/2024) சனிக்கிழமை அன்று காலை 2.30 மணி முதல் நாளை ஞாயிற்றுக்கிழமை இரவு 11.30 மணி வரை கடல் அலைகள் அரை மீட்டர் முதல் 1½ மீட்டர் உயரம் வரை எழும்.
இதனால் பொதுமக்கள் கடற்கரைக்கு செல்வதையும், கடற்கரை பூங்காக்களில் நடமாடுவதை தவிர்க்க வேண்டும் என்றும், கடலோர மீனவ கிராம மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும், மீனவர்கள் தங்கள் படகுகளை கடற்கரையில் இருந்து பாதுகாப்பான தூரத்தில் படகுகளை நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழகத்தில் குமரி, நெல்லை, ராமநாதபுரம், தூத்துக்குடி கடலோரப் பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாளை இரவு வரை தென் மாவட்டங்களில் 0.5 - 1. 5 அடிக்கு அலைகள் எழலாம் என்றும், முதல் முறையாக இதுபோன்றதொரு எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் அளித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட மீன்வளத்துறை அதிகாரிகள் மீனவ கிராமங்களுக்கு சீற்றம் குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளனர். கடலுக்கு செல்லும் மீனவர்கள் பாதுகாப்பாக செல்ல வேண்டும். கடற்கரையோர மீனவ மக்கள் பாதுகாப்பாகவும், விழிப்புடனும் இருக்க வேண்டும் என்றும் அனைத்து மீனவ கிராமங்களுக்கும் அறிவுறுத்தி உள்ளனர்.