» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தொழிலாளர்களுக்கு மே தின விடுமுறை அளிக்க வேண்டும்: மக்கள் வாழ்வாதார பாதுகாப்பு சங்கம்
செவ்வாய் 30, ஏப்ரல் 2024 12:19:15 PM (IST)
அனைத்து தொழிலாளர்களுக்கும் மே தின விடுமுறை அளிக்க வேண்டும் என்று மக்கள் வாழ்வாதார பாதுகாப்பு சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
தூத்துக்குடி மக்கள் வாழ்வாதார பாதுகாப்பு சங்கத்தின் செயலாளர் கணேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மே தினம்" அரசு விடுமுறை தினமாக கொண்டாடப்படுகிறது. ஆனால் கடந்த 25 வருடங்களாக தொழிலாளர் உரிமைகள், பெற்ற வெற்றி, சிறுகச் சிறுகப் பரிபோகி விட்டது. அதிலும் தொழிலாளர் நல அரசு என்று கூறும் ஆட்சியாளர்களே தொழிலாளர் விரோதப் போக்கை கடைபிடிப்பது வருத்தமளிக்கிறது.
இதனால் தனியார் தொழிற்சாலைகளையும், கண்டிக்க முடிவதில்லை. ஒப்பந்த தொழிலாளர்கள் செய்வதறியாது திகைக்கின்றனர். இன்று ஒரு நாளைக்கு 8 மணிநேரம் வேலை என்பது நடைமுறையில் இல்லை. உதாரணமாக காவலர்கள் பணி, காவலர்களுக்க 12மணி நேரம் என்பது அனைத்து இடங்களிலும் பரவலாக உள்ளது.
மேலும் நிரந்தரப் பணியிடங்களில் ஒப்பந்தத் தொழிலாளர்கள் நியமனம், ஒப்பந்த தொழிலாளர்களுக்கு பணி பாதுகாப்பு இன்மை, ஒரே பணி செய்யும் நிரந்தர தொழிலாளிக்கு ஒரு சம்பளம், அதைவிட பல ஆயிரம் குறைவாக, அதே பணி செய்யும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு ஒரு சம்பளம் என பல கோடி தொழிலாளர்கள் பரிதாப நிலையில் பணியாற்றுகிறார்கள். அவர்களுக்கு போராட வலிமையில்லை, கண்ணீர் வடிக்கிறார்கள்.
மே தின விடுமுறை அளித்து தொழிலாளர்கள் விடுதலை நாளை கொண்டாடும் அரசுகள், தொழிலாளர்கள் பல ஆண்டுகள் போராடி தன் இன்னுயிரும், இரத்தமும் சிந்தி பெற்ற உரிமைகளை மீண்டும் அவர்களுக்கு வழங்க முன்வர வேண்டுகிறோம். அதற்கான நடவடிக்கைகளை நாடெங்கும் உடனடியாக துவங்க வலியுறுத்துகிறோம். தயவு செய்து கருணையுடன் பரிசீலிக்க பணிவுடன் வேண்டுகிறோம். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.