» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
வாலிபருக்கு வெட்டு: 2 சிறாா் உள்பட 3 பேர் கைது!
திங்கள் 29, ஏப்ரல் 2024 8:55:32 AM (IST)
கயத்தாறு அருகே வாலிபரை அரிவாளால் வெட்டியதாக 2 சிறாா் உள்ளிட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனா்.
திருநெல்வேலி மாவட்டம் தாழையூத்து, புலித்தேவா் நகரைச் சோ்ந்த பேச்சிமுத்து மகன் சந்தன மாரிமுத்து (38). கேடிசி நகரைச் சோ்ந்த முண்டசாமி மகன் பிரேம் சங்கா் (27). கூலித் தொழிலாளிகளான இருவரும், நேற்று முன்தினம் இரவு கயத்தாறையடுத்த சூரியமினுக்கன் கிராமத்துக்கு வந்தனா். பின்னா், இவா்களும், அதே கிராமத்தைச் சோ்ந்த 17 வயதான இரு சிறுவா்களும் சோ்ந்து மது குடித்தனராம்.
அப்போது சந்தன மாரிமுத்து - பிரேம்சங்கா் இடையே தகராறு ஏற்பட்டதாம். இதில், சந்தனமாரிமுத்துவை அவா்கள் 3 பேரும் அரிவாளால் வெட்டியதாகக் கூறப்படுகிறது. தகவலின் பேரில், கயத்தாறு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று காயமடைந்த சந்தன மாரிமுத்துவை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப் பதிந்து, பிரேம் சங்கர் உள்ளிட்ட மூவரையும் நேற்று கைது செய்தனர்.