» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
அரசு டாக்டரிடம் இருந்து ரூ.1 லட்சம் பறிமுதல் : தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி
வியாழன் 11, ஏப்ரல் 2024 8:33:33 AM (IST)
கோவில்பட்டியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் அரசு டாக்டரிடம் இருந்து ரூ.1 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி திட்டங்குளம் காய்கறி மார்க்கெட் அருகில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் அனந்தலட்சுமி தலைமையிலான தேர்தல் பறக்கும் படை அலுவலர்கள் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி விசாரணை நடத்தினர். விசாரணையில், காரில் வந்தவர் மதுரை மாவட்டம் கிழக்கு கோமதிபுரம் மல்லிகை தெருவை சேர்ந்த மணி மகன் அமித் கண்ணா என்றும், புதுக்கோட்டை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அரசு டாக்டராக இருப்பதாகவும், நெல்லை மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்காக வந்துவிட்டு மதுரை செல்வதாகவும் தெரிவித்தார்.
பின்னர் அவரது காரை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது காரில் ரூ.1 லட்சம் இருப்பது தெரியவந்தது. ஆனால் அவரிடம் அந்த பணத்திற்கு முறையான ஆவணங்கள் இல்லை. இதைத் தொடர்ந்து அதிகாரிகள் அந்த பணத்தை பறிமுதல் செய்து கோவில்பட்டி தாலுகா அலுவலகத்தில் தேர்தல் பிரிவு துணை தாசில்தார் வெள்ளத்துரையிடம் ஒப்படைத்தனர்.