» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி மாவட்டத்தில் தளர்வில்லாத ஊரடங்கு : சாலைகள் வெறிச்சோடியது!
ஞாயிறு 16, ஜனவரி 2022 10:54:41 AM (IST)
தூத்துக்குடியில் தளர்வில்லாத முழு ஊரடங்கு காரணமாக கடைகள், வணிக நிறுவனங்கள் அடைக்கப்பட்டன. சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது.
தமிழகத்தில் கரோனா மற்றும் ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்த கட்டுப்படுத்த தமிழக அரசு சார்பில் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. மேலும் தமிழகத்தில் இரவு 10 மணி முதல் காலை 5 வரையும், ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கையும் அமல்படுத்த தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. இதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் தளர்வில்லாத முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது. இதனால் கடைகள், வணிக நிறுவனங்கள் எதுவும் திறக்கப்படவில்லை. காய்கறி மார்க்கெட், மீன், இறைச்சி கடைகள் உள்ளிட்ட அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. ஒரு சில மருந்துக் கடைகள் மற்றும் பால் கடைகள் மட்டும் ஆங்காங்கே திறந்திருந்தன.
இதேபோல் வாகனங்கள் எதுவும் இயங்காததால் அனைத்து சாலைகளும் வெறிச்சோடி காணப்பட்டன. தளர்வில்லா முழு ஊரடங்கை மீறி இருச்சக்கர வாகனங்களில் வெளியே திரிந்தவர்கள் மீது காவல்துறையினர் நடவடிக்கைகளை எடுத்தனர். முழு ஊரடங்கை முன்னிட்டு காவல் துறையினரின் வாகன சோதனையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் தூத்துக்குடியில் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள சிட்டி டவர் சந்திப்பு மற்றும் குரூஸ் பர்னாந்து சிலை சந்திப்பு ஆகிய இடங்களில் நேரில் சென்று பார்வையிட்டு, வெளியே சுற்றுபவர்களுக்கு அறிவுரைகள் வழங்கினார். இதுபோல் மாவட்டம் முழுவதும தளர்வில்லா முழு ஊரடங்கு அமலில் உள்ளது. காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.