» செய்திகள் - விளையாட்டு » உலகம்
ஜிடிபி அடிப்படையில் உலகின் முதல் 4 நாடுகளில் இந்தியா: ரஷிய அதிபர் புதின் பிரகடனம்
வெள்ளி 5, ஜூன் 2026 12:16:30 PM (IST)
மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) அடிப்படையில் சீனா, அமெரிக்கா, இந்தியா மற்றும் ரஷியா ஆகியவையே உலகின் முதல் நான்கு இடங்களை வகிக்கும் சக்திவாய்ந்த நாடுகள் என்று ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார்.
ரஷியாவில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில், சீனா மற்றும் பாகிஸ்தானுடனான இந்தியாவின் உறவுகள் குறித்து எழுப்பப்பட்ட பல்வேறு உலகளாவிய கேள்விகளுக்கு அவர் விரிவான பதிலளித்தார்."இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான எல்லைப் பிரச்சனைகளின் நுணுக்கங்களை ரஷியா நன்கு அறியும். அதேநேரம், பாகிஸ்தான் நாடு முழுமையாக சீனாவின் கட்டுப்பாட்டில் இருப்பதாக நான் கருதவில்லை. அது ஒரு பெரிய நாடு; பல்வேறு நாடுகளுடன் பலதரப்பட்ட உறவுகளைக் கொண்டுள்ளது. அவர்கள் சீனாவுடன் ஒத்துழைத்து வருகின்றனர். ஆனால், இன்றைய காலகட்டத்தில் உலக நாடுகள் அனைத்தும் சீனாவுடன் தங்களது உறவுகளை வளர்த்து வருகின்றன. தற்போது ஜிடிபி அடிப்படையில் இந்தியா மூன்றாவது இடத்திலும், ரஷியா நான்காவது இடத்திலும் உள்ளன" என்று அதிபர் புதின் குறிப்பிட்டார்.
இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவுகள் மிகவும் நுணுக்கமானவை மற்றும் பல பரிமாணங்களைக் கொண்டவை என்று சுட்டிக்காட்டிய புதின், "அவற்றில் பிற நாடுகள் தலையிடுவது நல்லதல்ல. ரஷியா, இந்தியா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளுடனும் தொடர் தொடர்பில் உள்ளது. சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆகிய இருவரும் எல்லை விவகாரங்கள் உள்பட பரஸ்பர நலன் சார்ந்த அனைத்துப் பிரச்சனைகளையும் சுமுகமாகத் தீர்க்கத் தொடர்ந்து முயற்சித்து வருகின்றனர்" என்றார்.
ரஷியாவுக்கு இந்தியா மற்றும் சீனாவுடன் தனிப்பட்ட நட்பு ரீதியிலான உறவுகள் இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், இதில் யாருக்கும் எவ்வித மனக்கசப்பும் இல்லை என்றார். "ரஷியா - இந்தியா இடையிலான உறவுகள் சீனாவைப் பாதிப்பதில்லை; அதேபோல் சீனாவுடனான எங்கள் உறவுகள் இந்தியாவைப் பாதிப்பதில்லை. இதற்கு உதாரணமாக 'பிரிக்ஸ்' (BRICS) அமைப்பைக் கூறலாம். ரஷியா - இந்தியா - சீனா இடையிலான கூட்டமைப்பு உருவாக ரஷியாவே அடித்தளமிட்டது. எங்களைப் பொறுத்தவரை இந்தியா அல்லது சீனா உள்பட எந்த நாட்டுடனும் இணைந்து ஒத்துழைப்பதில் சிக்கல் இல்லை" என்று விளக்கினார்.
பாதுகாப்புத் துறையில் இந்தியாவுடன் இணைந்து நவீன ஆயுதங்களைத் தயாரிப்பதில் ரஷியா தொடர்ந்து ஒத்துழைத்து வருவதாகப் புதின் பெருமிதத்துடன் தெரிவித்தார். "இந்தியா ஏற்கனவே 'பிரம்மோஸ்' ஏவுகணைகளைத் தயாரித்துள்ளது. மேலும், அதிநவீன 'சு-57' (Su-57) போர் விமானத் தொழில்நுட்பத்தில் இணைந்து பணியாற்ற இந்தியாவுக்கு நாங்கள் அழைப்பு விடுத்தோம்.
அதற்கு இந்தியத் தரப்பில், தற்போதைக்கு இத்தொழில்நுட்பத்தை நீங்களே செய்யுங்கள், பின்னர் நாங்கள் உங்களோடு இணைந்து கொள்கிறோம் என்று தெரிவித்துள்ளனர்" என ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் தெரிவித்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இலங்கையில் முதியோர் இல்லத்தில் தீ விபத்து: 11 பேர் பலி, 7 பேர் மருத்துவமனையில் அனுமதி!
வியாழன் 4, ஜூன் 2026 5:43:08 PM (IST)

ஈரான் ஏவுகணைத் தாக்குதலில் இந்தியர் பரிதாப பலி; குவைத்தில் விமான சேவைகள் முடக்கம்!
புதன் 3, ஜூன் 2026 5:43:58 PM (IST)

இந்தியா, சீனா மீது 12.5% கூடுதல் வரி விதிக்க அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி புதிய பரிந்துரை!
புதன் 3, ஜூன் 2026 11:41:04 AM (IST)

நான் இல்லையென்றால் சிறையில் இருந்திருப்பீர்கள்! – நெதன்யாகுவை எச்சரித்த டொனால்ட் டிரம்ப்!
செவ்வாய் 2, ஜூன் 2026 11:01:57 AM (IST)

பிரான்சில் கால்பந்து கொண்டாட்டத்தின்போது வன்முறை: 400க்கும் மேற்பட்டோர் கைது!
திங்கள் 1, ஜூன் 2026 12:51:54 PM (IST)

அணு ஆயுத தயாரிப்பைக் கைவிடாவிட்டால் ஈரான் மீது மீண்டும் தாக்குதல்: அமெரிக்கா எச்சரிக்கை!
ஞாயிறு 31, மே 2026 8:56:20 PM (IST)










