» செய்திகள் - விளையாட்டு » உலகம்
நட்பு நாடுகளிடம் இனி பாகிஸ்தான் கடன் கேட்காது: பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் உறுதி!!
செவ்வாய் 12, மார்ச் 2024 5:47:05 PM (IST)
நட்பு நாடுகளிடம் இருந்து பாகிஸ்தான் இனி கடன்களை கேட்காது என்று பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் நாடு கடந்த சில ஆண்டுகளாக விலைவாசி உயர்வு, பொருளாதார மந்தநிலை ஆகியவற்றால் பாதிப்படைந்து உள்ளது. இந்நிலையில், கடந்த பிப்ரவரி 8-ந்தேதி அந்நாட்டில் பொது தேர்தல் நடந்து முடிந்தது.எந்த கட்சிக்கும் மெஜாரிட்டி இல்லாத சூழலில், நீண்ட இழுபறிக்கு பின்னர் கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது. இதன்படி, பிரதமராக ஷெபாஸ் ஷெரீப் பொறுப்பேற்று கொண்டார்.
அவருடைய தலைமையிலான மத்திய மந்திரி சபை 16 உறுப்பினர்களுடன் புதிதாக நேற்று உருவாக்கப்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து முதல் கூட்டம் நடந்தது. இதில், வெளிநாடுகளிடம் பாகிஸ்தான் கடன் பெறும் சவாலான சூழல் அதிகரித்த நிலையில், அதுபற்றி குறிப்பிட்டு பிரதமர் ஷெரீப் பேசும்போது, நட்பு நாடுகளிடம் இருந்து இனி கடன்களை கேட்கமாட்டேன். ஆனால் முதலீடுகளை மேற்கொள்ளும்படி கேட்பேன் என்று வெளிநாடுகளின் தூதர்களிடம் கூறியுள்ளேன்.
நாம் நமக்குள் சண்டையிட்டு கொள்வதற்கு பதிலாக, வறுமையை எதிர்த்து போராட வேண்டும் என பேசியுள்ளார். உயரடுக்கை சேர்ந்த பிரிவினருக்கு மானியங்கள் வழங்குவது நிறுத்தப்பட வேண்டும். ஏழைகள் பணவீக்கத்தின் கீழ் நசுக்கப்படும்போது, அதுபோன்ற மானியங்களை நியாயப்படுத்த முடியாது. அவற்றை எவ்வளவு விரைவாக நாம் நீக்குகிறோமோ அந்தளவுக்கு மக்களுக்கு சிறந்த ஒன்றாக இருக்கும் என்று கூறினார்.
அவருடைய இந்த பேச்சின்போது, உலகளவில் கடன் வழங்குவோர் சில்லரை விற்பனையாளர்கள் மீது வரிகளை விதிக்க வலியுறுத்துகின்றனர் என அந்த நாடுகளின் பெயர்கள் எதனையும் குறிப்பிடாமல் கூறினார். ஏற்கனவே அவர்கள் உச்சம் தொட்டுள்ள பணவீக்கத்தின் அதிர்ச்சியை சுமந்து கொண்டு உள்ளனர் என கூறிய அவர், மொத்த விற்பனையாளர்களை வரி விதிப்புக்குள் கொண்டு வரவேண்டும் என்று கூறினார்.
நாங்கள், சர்வதேச நாணய நிதிய அமைப்பை சார்ந்து இருப்பதில் இருந்து விலகி இருப்போம் என்றும் வெளிநாட்டு கடன்களிலிருந்து பாகிஸ்தானை மீட்க உறுதி எடுத்துள்ளோம் என்றும் அவர் கூறியுள்ளார்.