» செய்திகள் - விளையாட்டு » உலகம்
டிரம்ப் மீண்டும் அதிபரானால் ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தல் : பைடன் பிரசாரம்
சனி 6, ஜனவரி 2024 11:10:35 AM (IST)
டிரம்ப் மீண்டும் அதிபரானால் அமெரிக்க ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் என்று பிரசாரத்தில் பைடன் பேசினார்.
அமெரிக்காவின் அதிபராக ஜனநாயக கட்சியை சேர்ந்த ஜோ பைடன் பதவி வகித்து வருகிறார். நடப்பு ஆண்டில் அந்நாட்டில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு, தேர்தல் பணிகள் சூடு பிடித்துள்ளன. இதில், குடியரசு கட்சியை சேர்ந்த முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் மீண்டும் போட்டியிட முடிவு செய்துள்ளார். அவருக்கு எதிராக பல்வேறு வழக்குகள் உள்ளன.
எனினும், பெருமளவிலான மக்கள் ஆதரவும் அவருக்கு காணப்படுகிறது. இதனால், அதிபர் தேர்தலில் பலத்த போட்டி காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் அதிபர் பைடன் தன்னுடைய முதல் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர், டொனால்டு டிரம்பை கடுமையாக தாக்கி பேசினார்.
அப்போது அவர், டிரம்ப் மீண்டும் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டால் அமெரிக்க ஜனநாயகத்திற்கு ஓர் அச்சுறுத்தல் ஏற்படுத்தும் என எச்சரிக்கையும் விடுத்திருக்கிறார். பைடன் தொடர்ந்து பேசும்போது, டிரம்பின் பிரசாரம் அவரை பற்றியே உள்ளது. அமெரிக்காவை பற்றியோ, மக்களைப் பற்றியோ அல்ல. அவருடைய பிரசாரம் கடந்த காலத்துடன் தொடர்புடைய ஒன்றாகவே உள்ளது. வருங்காலம் பற்றி இருக்கவில்லை. நம்முடைய ஜனநாயகத்தினை தியாகம் செய்ய தயாராகி விட்டு, அவரை அதிகாரத்தில் அமர்த்த பார்க்கிறார் என்று பைடன் பேசியுள்ளார்.