» செய்திகள் - விளையாட்டு » உலகம்
மியான்மரில் ஊழல் குற்றச்சாட்டில் ராணுவ தளபதிக்கு சிறை : நீதிமன்றம் தீர்ப்பு
ஞாயிறு 12, நவம்பர் 2023 3:00:03 PM (IST)
மியான்மரில் ஊழல் குற்றச்சாட்டு வழக்கில் முன்னாள் ராணுவ தளபதிக்கு 5 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
தென்கிழக்கு ஆசிய நாடான மியான்மரில் 2020-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்டு ஆங் சான் சூகி (78) வெற்றி பெற்றார். ஆனால் தேர்தலில் முறைகேடு நடைபெற்றதாக கூறி இவரது பதவியை ராணுவம் பறித்தது.இதனையடுத்து 2021-ம் ஆண்டு மீண்டும் ராணுவ ஆட்சி அங்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் ராணுவத்துக்கு எதிராக கிளர்ச்சி, ஊழல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் ஆங் சான் சூகி மீது சுமத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
அதேபோல் முன்னாள் ராணுவ ஜெனரல் உள்ளிட்ட பல உயர் அதிகாரிகளும் இதே குற்றச்சாட்டில் சிறையில் அடைக்கப்பட்டு வருகின்றனர். எனவே ஆங் சான் சூகி மற்றும் பிற தலைவர்களை விடுதலை செய்ய கோரி இன்றளவும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் முன்னாள் ராணுவ தளபதி சோ டட் மீது ஊழல், அதிகார துஷ்பிரயோகம் உள்பட பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. இவர் மீதான வழக்கு மியான்மரில் உள்ள ராணுவ கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில் சோ டட் மீதான குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டது. எனவே அவருக்கு 5 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பளித்தது.
கடந்த 2½ ஆண்டு ராணுவ ஆட்சியில் ஊழல் குற்றச்சாட்டில் முன்னாள் அரசியல் தலைவர்கள், ராணுவ அதிகாரிகளுக்கு சிறைதண்டனை அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த மாதம் இரு ராணுவ அதிகாரிகளுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் தற்போது சோ டட்டுக்கு 5 ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.