» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

கிணற்றில் கார் பாய்ந்து தம்பதி, 2 குழந்தைகள் உயிரிழப்பு: தெலுங்கானாவில் சோகம்!

வியாழன் 20, ஆகஸ்ட் 2026 12:22:33 PM (IST)

CarWellAccident.jpg

தெலுங்கானாவில் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரக் கிணற்றில் பாய்ந்த விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தம்பதி மற்றும் அவர்களது 2 குழந்தைகள் நீரில் மூழ்கிப் பரிதாபமாக உயிரிழந்தனர்.

தெலுங்கானா மாநிலம் பாலவந்தபூர் கிராமத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர், சித்திப்பேட்டையில் நடைபெற்ற உறவினர் வீட்டுச் சடங்கு நிகழ்ச்சியில் கலந்துகொண்டுவிட்டு நேற்று மாலை காரில் ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர்.

அப்போது, அப்பனப்பள்ளி புறநகர்ப் பகுதியில் கார் சென்றுகொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரத்தில் இருந்த சுமார் 22 அடி ஆழமுள்ள கிணற்றுக்குள் பாய்ந்து விபத்துக்குள்ளானது.

விபத்து குறித்துத் தகவலறிந்த காவல்துறையினர் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்து தீவிரத் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். நள்ளிரவு நேரத்தில், நீர் நிறைந்திருந்த கிணற்றுக்குள் கார் மூழ்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

தீவிர மீட்புப் பணிகளுக்குப் பிறகு, இன்று அதிகாலை வேளையில் கார் கிணற்றிலிருந்து வெளியே மீட்கப்பட்டது. காருக்குள் இருந்த தம்பதி மற்றும் அவர்களது 2 குழந்தைகள் என 4பேரும் நீரில் மூழ்கி மூச்சுத்திணறி உயிரிழந்தது தெரியவந்தது.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்த இச்சம்பவம் குறித்துக் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இத்துயரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Thoothukudi Business Directory