» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

இரட்டைப் பெண் குழந்தைகளைக் கிணற்றில் தள்ளிக் கொலை: கொடூர தந்தை கைது!

ஞாயிறு 5, ஏப்ரல் 2026 1:27:48 PM (IST)

தெலுங்கானா மாநிலத்தில் ஆண் குழந்தை வேண்டும் என்ற வெறியால், தனது இரண்டு பிஞ்சு பெண் குழந்தைகளையும் கிணற்றில் தள்ளித் தந்தை கொலை செய்துள்ள கொடூரச் சம்பவம் அரங்கேறியுள்ளது.

தெலுங்கானா மாநிலம் கரீம்நகர் மாவட்டம், ஜூப்ளிநகரைச் சேர்ந்தவர் ஸ்ரீசைலம். இவரது மனைவி மவுனிகா. இத்தம்பதியினருக்கு கீதான்ஸ்ரீ (4) மற்றும் கீதான்விகா (4) என்ற இரட்டைப் பெண் குழந்தைகள் இருந்தனர். பெண் குழந்தைகள் பிறந்த காரணத்தைக் காட்டி, ஸ்ரீசைலம் அடிக்கடி தனது மனைவியுடன் தகராறு செய்து வந்ததாகக் கூறப்படுகிறது.

கடந்த வெள்ளிக்கிழமை மதியம், குழந்தைகளை விவசாய நிலத்திற்கு அழைத்துச் செல்வதாகக் கூறி ஸ்ரீசைலம் வீட்டிலிருந்து அழைத்துச் சென்றார். நீண்ட நேரமாகியும் அவர் வராததால் சந்தேகமடைந்த மவுனிகா, நிலத்திற்குச் சென்று பார்த்துள்ளார். அப்போது குழந்தைகள் குறித்துக் கேட்டபோது, அவர்கள் விளையாடிக்கொண்டிருந்தபோது கிணற்றில் தவறி விழுந்துவிட்டதாக ஸ்ரீசைலம் முன்னுக்குப் பின் முரணாகப் பதிலளித்துள்ளார்.

ஸ்ரீசைலத்தின் நடவடிக்கையில் சந்தேகமடைந்த கிராம மக்கள், உடனடியாக அவரைப் பிடித்துப் போலீசாரிடம் ஒப்படைத்தனர். தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் பல மணி நேரம் போராடிக் கிணற்றிலிருந்து இரண்டு பெண் குழந்தைகளின் உடல்களையும் மீட்டனர்.

போலீஸ் விசாரணையில் ஸ்ரீசைலம் அளித்த வாக்குமூலம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. "ஆண் குழந்தை வேண்டும் என்ற ஆசை எனக்கு இருந்தது. இந்தப் பெண் குழந்தைகளைக் கொன்றுவிட்டால், எனது மனைவி என்னைப் பிரிந்து விவாகரத்து கொடுத்துவிடுவார்; அதன் பிறகு நான் வேறு திருமணம் செய்து ஆண் குழந்தையைப் பெற்றுக் கொள்ளலாம்" என்ற எண்ணத்தில் இக்கொடூரச் செயலைச் செய்ததாக அவர் ஒப்புக்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து, போலீசார் வழக்குப் பதிவு செய்து ஸ்ரீசைலத்தைக் கைது செய்தனர். பெற்ற தந்தையே தனது குழந்தைகளைக் கொலை செய்த இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital





Thoothukudi Business Directory