» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
அயோத்தி கும்பாபிஷேக நேரலைக்கு தடை: தமிழக அரசு 29-ந்தேதிக்குள் பதில் அளிக்க உத்தரவு!
செவ்வாய் 23, ஜனவரி 2024 8:17:53 AM (IST)
அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக நிகழ்ச்சி நேரலைக்கு தடை விதித்த விவகாரத்தில் 29-ந்தேதிக்குள் தமிழ்நாடு அரசு பதில் அளிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
அயோத்தி கோவில் கும்பாபிஷேகம் நேற்று கோலாகலமாக நடந்தது. இந்த விழாவை கோவில்கள், திருமண மண்டபங்களில் நேரலையாக ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. ஆனால் தமிழகத்தில் பொது இடங்களில் ஒளிபரப்பு செய்ய போலீசார் தடை விதித்ததாக புகார் எழுந்தது. இதனை எதிர்த்து பா.ஜனதா பிரமுகர் வினோஜ் பி.செல்வம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, தீபாங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று விசாரித்தது. அப்போது வினோஜ் பி.செல்வம் சார்பில் மூத்த வக்கீல்கள் தம்ம சேஷாத்ரி நாயுடு, பி.வள்ளியப்பன் ஆகியோர் ஆஜராகி, மதத்தை வெறுக்கும் அரசியல் கட்சி அதை ஆட்சியிலும் செயல்படுத்துகிறது என வாதிட்டனர்.
அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக நேரலை செய்ய தனியார் கோவில்களிலும் அனுமதி மறுக்கப்படுகிறது. இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தலையிட வேண்டும் என சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வாதிட்டார். நேரலைக்கு எவ்வித தடையும் இல்லை. இந்த மனு அரசியல் உள்நோக்கம் கொண்டது என தமிழ்நாடு அரசின் சார்பில் ஆஜரான அடிஷனல் அட்வகேட் ஜெனரல் அமித் ஆனந்த் திவாரி வாதிட்டார்.
அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட சுப்ரீம் கோர்ட்டு, இந்த விவகாரம் தொடர்பாக தமிழக அரசு சட்டப்படி நடந்துகொள்ளவேண்டும். இதுதொடர்பாக வருகிற 29-ந்தேதிக்குள் பதில் அளிக்க மத்திய அரசுக்கும், தமிழ்நாடு அரசுக்கும் உத்தரவிட்டுள்ளது.