» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
குடியரசு தின அணிவகுப்பில் சாகசம்: தூத்துக்குடி, குமரியை சேர்ந்த பெண் கமாண்டோக்கள் தேர்வு
ஞாயிறு 21, ஜனவரி 2024 10:54:50 AM (IST)
குடியரசு தின அணிவகுப்பு பேரணியில் மோட்டார் சைக்கிள் சாகசம் செய்வதற்காக தூத்துக்குடி, குமரி மாவட்டங்களை சேர்ந்த சி.ஆர்.பி.எப். பெண் கமாண்டோக்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் டெல்லியில் தினமும் தீவிர ஒத்திகையில் ஈடுபட்டு வருகின்றனர்.
மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் (சி.ஆர்.பி.எப்.-ல்.) உள்ள பெண் கமாண்டோ படையினர் கன்னியாகுமரி முதல் குஜராத் வரை ‘பெண்கள், பெண் குழந்தைகளை காப்போம், கற்பிப்போம்' என்ற பெயரில் விழிப்புணர்வு மோட்டார் சைக்கிள் பேரணியை நடத்தினர். கடந்த ஆண்டு அக்டோபர் 5-ந்தேதி கன்னியாகுமரியில் தொடங்கிய இந்த பேரணி, சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாளான அக்டோபர் 31-ந்தேதி குஜராத் மாநிலத்தை சென்றடைந்தது.
பேரணியில் சென்ற பெண் கமாண்டோ படையினர் பல்வேறு சாகசங்களை குஜராத்தில் செய்து காட்டினர். இதில், தமிழ்நாட்டைச் சேர்ந்த 9 பெண் கமாண்டோக்கள் சிறப்பாகவும், திறமையாகவும் சாகசங்களை செய்தனர். இதையடுத்து வருகிற 26-ந்தேதி டெல்லியில் நடைபெறவுள்ள குடியரசு தின அணிவகுப்பு பேரணியில் பங்கேற்கும் வாய்ப்பு இவர்களுக்கு கிடைத்துள்ளது. தேர்வான 9 பேரில் தூத்துக்குடி மாவட்டம், முடிவைத்தானேந்தல் கிராமத்தைச் சேர்ந்த லட்சுமணன் என்பவரது மனைவி ஜான்சி மனோகரன் என்பவரும் ஒருவர்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:-தென்மண்டலத்துக்கான சி.ஆர்.பி.எப். கமாண்டோ படையில் பணியாற்றுகிறேன். பெண் கமாண்டோக்கள் மோட்டார் சைக்கிள் பேரணியில் திறமையாக சாகசங்களை செய்து காட்டியதால், குடியரசு தின அணிவகுப்பு பேரணியில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்டுள்ளோம். மொத்தம் 60 பெண் கமாண்டோக்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளோம். அதில், நான் உள்பட 9 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள்.
நாங்கள் ஒவ்வொரு குழுவாக சேர்ந்து குடியரசு அணிவகுப்பில் சாகசம் செய்ய உள்ளோம். அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த விஜிலா, கலைவாணி ஆகியோருடன் சேர்ந்து மோட்டார் சைக்கிள் சாகசங்களை செய்துக்காட்ட உள்ளேன். இதற்காக நாங்கள் 3 பேரும் தினமும் கடுமையான ஒத்திகையில் ஈடுபட்டுள்ளோம். வருகிற 26-ந்தேதி ஜனாதிபதி, பிரதமர் மற்றும் சர்வதேச தலைவர்கள் முன்பு எங்களது சாகசங்களை செய்து காட்டி பாராட்டுகளை பெற உள்ளோம் என்பதை மகிழ்ச்சியுடன் முன்கூட்டியே தெரிவித்துக்கொள்கிறோம். இவ்வாறு அவர் நம்பிக்கையுடன் பதில் அளித்தார்.