» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழகத்தில் பாலியல் வன்கொடுமைகள்: திமுக மேடையில் பிரேமலதா விஜயகாந்த் பேச்சு!

வியாழன் 16, ஏப்ரல் 2026 5:24:39 PM (IST)



சேலம் பிரசார கூட்டத்தில் பேசிய பிரேமலதா விஜயகாந்த், தமிழகத்தில் நிலவும் போதை கலாசாரம் மற்றும் பாதுகாப்பு குறித்த புகார்களைக் குறிப்பிட்டுப் பேசினாலும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீது தனக்கு முழு நம்பிக்கை இருப்பதாகத் தெரிவித்தார். 

சேலத்தில் நேற்று நடைபெற்ற பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ஆகியோர் ஒரே மேடையில் தோன்றி வாக்கு சேகரித்தனர். முன்னதாக, மூன்று தலைவர்களும் தொண்டர்கள் புடைசூழப் பேரணியாக மேடைக்கு வந்தனர்.

மேடையில் பேசிய பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்ததாவது:    "இன்றுதான் முதன்முறையாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் பேரணியில் நடந்து சென்றேன். அவர் இவ்வளவு சுறுசுறுப்பாக இருப்பதற்குக் காரணம் அவர் தினமும் மேற்கொள்ளும் உடற்பயிற்சிதான் என்பதைப் புரிந்துகொண்டேன். பேரணியின் போது ஆண்களுக்கு நடுவே பெண்ணாக நான் மட்டுமே இருந்தேன். ஒவ்வொரு நிமிடமும் அவர் என்னைத் திரும்பிப் பார்த்து எனது பாதுகாப்பை உறுதி செய்துகொண்டே இருந்தார். அப்போதே முடிவு செய்துவிட்டேன், அவர் பெண் இனத்தின் உண்மையான பாதுகாவலர் என்று.”

தொடர்ந்து பேசிய அவர், திமுக அரசு மீதான விமரிசனங்களுக்குப் பதிலளிக்கும் வகையில் பேசியது கூட்டத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது:"தமிழ்நாடு முழுவதும் அண்ணன் (மு.க.ஸ்டாலின்) மீது ஒரு குற்றச்சாட்டு சொல்லப்படுகிறது. எங்கே பார்த்தாலும் பாலியல் வன்கொடுமை, போதை கலாசாரம் இருப்பதாகச் சொல்கிறார்கள். 

இதைத் தவிர இந்த ஆட்சியின் மேல் வேறு என்ன குறையைச் சொல்ல முடியும்? ஒரு சகோதரியாக இன்று இந்தக் கூட்டணியில் அண்ணனுக்கு வலதுகரமாக இணைந்துள்ளேன். இனி எங்குப் பெண்களுக்குப் பாதிப்பு ஏற்பட்டாலும், நான் உரிமையோடு அண்ணனிடம் பேசுவேன். அவர் நிச்சயம் சிசிடிவி கேமராக்கள் மற்றும் இதர வசதிகள் மூலம் பெண்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்வார்."

"பெண்கள் சக்தியின் அடையாளங்கள். தமிழ்நாட்டிற்கும் நமது திராவிடப் பாரம்பரியத்திற்கும் ஏதேனும் அச்சுறுத்தல் வந்தால், நாம் அனைவரும் ஜான்சி ராணியாகவும், வேலு நாச்சியாராகவும் மாறி இந்த ஆட்சிக்குத் துணையாக நிற்போம். பெண் சக்தி ஒன்றிணைந்தால் இந்த உலகமே எதிர்த்தாலும் அண்ணனை (மு.க.ஸ்டாலின்) யாராலும் வீழ்த்த முடியாது," என்று பிரேமலதா உணர்ச்சிவசப்படப் பேசினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital



Thoothukudi Business Directory