» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

அண்ணாமலை மீது வழக்கு தொடர அனுமதி பிறப்பிக்கவில்லை: ஆளுநர் மாளிகை விளக்கம்

திங்கள் 13, மே 2024 5:15:37 PM (IST)

அண்ணாமலை மீது வழக்கு தொடர அனுமதி பிறப்பிக்கவில்லை என்று ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது.

சனாதனம் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதை கண்டித்து கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பா.ஜ.க. சார்பில் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை, அண்ணா குறித்து சர்ச்சையாக பேசியதாக கூறப்படுகிறது. இதற்கு தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. 

இருதரப்பினர் இடையே மோதலை ஏற்படுத்தும் வகையில் அண்ணாமலை பேசியதாக கூறி அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சேலத்தை சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் பியூஸ்மனுஷ் சேலம் கலெக்டரிடம் புகார் மனு கொடுத்தார். இதைத்தொடர்ந்து இருதரப்பினர் இடையே மோதலை ஏற்படுத்தும் வகையில் பேசியதாக அண்ணாமலை மீது வழக்கு தொடர அனுமதி கோரி தமிழக அரசின் பொதுத்துறை செயலாளருக்கு, சேலம் கலெக்டர் கடிதம் அனுப்பினார். இந்த கடிதத்தை பரிசீலித்த தமிழக அரசு, அண்ணாமலை மீது குற்றவியல் வழக்கு தொடர அனுமதி அளித்துள்ளது.

இந்த நிலையில், அண்ணா குறித்து பேசியதற்கு பாஜக தலைவர் அண்ணாமலை மீது வழக்கு தொடர ஆளுநர் ஆர்.என்.ரவி அனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளியான நிலையில் அதற்கு ஆளுநர் மாளிகை மறுப்பு தெரிவித்துள்ளது.

ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு ஆளுநர் அவர்களால் தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மீது கிரிமினல் வழக்கில் வழக்குப்பதிவு செய்ய அனுமதி அளித்துள்ளதாக ஊடகங்களில் பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு ஆளுநர் மாளிகைக்கு கடந்த இரண்டு நாட்களாக பொதுமக்களிடம் இருந்து பரபரப்பு கேள்விகள் எழுப்பப்பட்டு வருகிறது.

பாஜக தலைவர் அண்ணாமலை அவர்களுக்கு எதிரான கிரிமினல் வழக்கு குறித்து தமிழ்நாடு ஆளுநர் மாளிகை எந்த ஒரு தகவலும் அறிந்திருக்கவில்லை. மேலும், அது தொடர்பான அனுமதி உத்தரவு எதுவும் பிறப்பிக்கவில்லை என்று இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Arputham Hospital








Thoothukudi Business Directory