» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
ஈரானிலிருந்து மெழுகு இறக்குமதியில் சிக்கல்: தமிழகத்தில் தீப்பெட்டி தொழில் முடங்கும் அபாயம்
செவ்வாய் 10, மார்ச் 2026 8:05:18 PM (IST)
மத்திய கிழக்கு நாடுகளுக்கு இடையே நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக, ஈரானிலிருந்து மெழுகு இறக்குமதி செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாகத் தமிழகத்தின் பிரதான தொழில்களில் ஒன்றான தீப்பெட்டி தொழில் முடங்கும் அபாயம் உருவாகியுள்ளதுடன், சுமார் 5 லட்சம் தொழிலாளர்களின் வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகி உள்ளது.
தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டத்தின் கோவில்பட்டி, கழுகுமலை, எட்டயபுரம், கடலையூர்; தென்காசி மாவட்டத்தின் திருவேங்கடம், குருவிகுளம்; விருதுநகர் மாவட்டத்தின் சாத்தூர், சிவகாசி, தாயில்பட்டி, ஏழாயிரம்பண்ணை, திருத்தங்கல், ஸ்ரீவில்லிபுத்தூர்; வேலூர் மாவட்டத்தின் குடியாத்தம் மற்றும் தர்மபுரி மாவட்டத்தின் காவிரிப்பட்டினம் ஆகிய இடங்களில் சுமார் 400 இயந்திரத் தீப்பெட்டி தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.
இத்தொழிற்சாலைகளில் 90 சதவீதம் பெண் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்பு மூலம் சுமார் 5 லட்சம் பேர் இத்தொழிலை நம்பி வாழ்கின்றனர். தற்போது நிலவி வரும் போர் சூழலால், தீப்பெட்டி உற்பத்தியின் முக்கிய மூலப்பொருளான மெழுகு (Wax) கிடைப்பதில் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பெரும்பாலான மெழுகு ஈரானிலிருந்தே இறக்குமதி செய்யப்படுகிறது. கப்பல் போக்குவரத்து முடங்கியுள்ளதால் வரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
முன்பு ஒரு கிலோ ரூ.80-க்கு விற்கப்பட்ட மெழுகு, தற்போது ரூ.130 வரை உயர்ந்துள்ளது. மேலும், தீப்பெட்டி பண்டல்களைக் கட்டப் பயன்படும் பி.பி. கவர் மற்றும் செலோடேப் தயாரிக்கத் தேவையான 'வெர்ஜின் பெட்ரோலியம்' பொருட்களும் ஈரானிலிருந்தே வருவதால், அவற்றின் விலையும் பன்மடங்கு அதிகரித்துள்ளது.
இதுகுறித்து தீப்பெட்டி உற்பத்தியாளர் ராஜ் என்பவர் கூறுகையில்: "ஈரான் மெழுகு வரத்து தடைபட்டதால் உள்நாட்டு வியாபாரிகள் விலையை உயர்த்திவிட்டனர். மெழுகு தட்டுப்பாட்டால் உள்நாட்டு உற்பத்தி மட்டுமின்றி, வெளிநாட்டு ஏற்றுமதியும் பாதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பிளாஸ்டிக் லைட்டர்களின் ஆதிக்கத்தால் நலிவடைந்து வரும் இத்தொழில், இப்போது மெழுகு விலையேற்றத்தால் மேலும் சரிவைச் சந்தித்துள்ளது. 5 லட்சம் தொழிலாளர்களின் நலன் கருதி மத்திய, மாநில அரசுகள் உடனடியாக தலையிட்டு மெழுகு தட்டுப்பாட்டைப் போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

10ம் வகுப்பு பொது தேர்வு எழுதவுள்ள மாணவிகளுக்கு மஞ்சப்பை வழங்கி வாழ்த்திய சார் ஆட்சியர்
செவ்வாய் 10, மார்ச் 2026 8:19:24 PM (IST)

ஊரக வேலை உறுதி திட்டத்தில் குறைதீர்ப்பாளர் நியமனம் : ஆட்சியர் க.இளம்பகவத் தகவல்!
செவ்வாய் 10, மார்ச் 2026 5:02:57 PM (IST)

குடியிருப்பிற்குள் புகுந்த 4 அடி நீள சாரைப்பாம்பு - தீயணைப்பு வீரர்கள் துரித நடவடிக்கை!
செவ்வாய் 10, மார்ச் 2026 4:15:26 PM (IST)

தென்னிந்தியாவில் சிலிண்டர் தட்டுப்பாடு: மத்திய அரசு தலையிட கனிமொழி எம்.பி. வலியுறுத்தல்
செவ்வாய் 10, மார்ச் 2026 3:49:14 PM (IST)

தூத்துக்குடியில் காடாக மாறிய மாநகராட்சி பூங்கா: சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை!
செவ்வாய் 10, மார்ச் 2026 12:49:00 PM (IST)

போலி காப்பீடு தயாரித்து மோசடி: 5 பேர் கைது - தூத்துக்குடி பொருளாதார குற்றப்பிரிவு அதிரடி
செவ்வாய் 10, மார்ச் 2026 11:49:29 AM (IST)








