» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
விளாத்திகுளத்தில் சித்திரை திருவிழா 5ஆம் நாள் : வண்ண விளக்குகளால் ஜொலித்த காவல் நிலையம்!
புதன் 17, ஏப்ரல் 2024 10:45:26 AM (IST)
விளாத்திகுளம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தின் சித்திரை திருவிழாவின் 5-ஆம் நாள் திருவிழாவானது காவல்துறையினர் சார்பில் வெகு விமர்சையாக நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் அமைந்துள்ள 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தின் சித்திரை திருவிழாவானது கடந்த 12-ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கட்டளைதாரர்கள் மூலம் திருவிழாக்கள் சிறப்பாக நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் 5-ம் திருவிழாவான விளாத்திகுளம் காவல் துறையினர் சார்பில் வெகு விமர்சையாக நடைபெற்றது.
இதனை முன்னிட்டு விளாத்திகுளத்தில் காவல் நிலையம் நன்கு அலங்கரிக்கப்பட்டு வாயிலில் வாழை மரங்கள் மற்றும் தோரணங்கள் கட்டப்பட்டு, ஒளிர் வண்ண விளக்குகளால் ஜொலிக்க விடப்பட்டு காவல் நிலையமே திருவிழாக்கோலம் பூண்டு காட்சியளித்தது. இந்நிகழ்ச்சியில் விளாத்திகுளம் காவல் துணைக்கண்காணிப்பாளர் ராமகிருஷ்ணன், ஆய்வாளர் வெங்கடேஷ் பெருமாள் மற்றும் காவல் உதவி ஆய்வாளர்களுக்கு பரிவட்டம் கட்டப்பட்டது.
பின்னர் மயில் மற்றும் யானை வாகனங்களில் சுவாமி எழுந்தருளிய சப்பரத்தை காவல் துறையினர் வடம் பிடித்து இழுத்து நகர்வலம் வந்தனர். இதனைத் தொடர்ந்து திருக்கோவிலுக்கு வந்திருந்த பக்தர்கள் அனைவருக்கும் காவல்துறையினர் சார்பில் பிரசாதங்கள் வழங்கப்பட்டன. மேலும் காவல்துறையினரே பொதுமக்களுடன் இணைந்து விழா எடுத்து நடத்திய நெகிழ்ச்சியான சம்பவம் அனைத்து தரப்பினரிடமிருந்தும் பாராட்டுகளை பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.