» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி கிறிஸ்தவ தேவாலயங்களில் புனித வியாழன் பாதம் கழுவுதல் நிகழ்ச்சி
வியாழன் 28, மார்ச் 2024 8:32:00 PM (IST)
தூத்துக்குடியில் புனித வியாழனை முன்னிட்டு கிறிஸ்தவ தேவாலயங்களில் பாதம் கழுவுதல் நிகழ்ச்சி இன்று மாலை நடந்தது.
இயேசு சிலுவையில் அறையப்பட்ட நாளை புனித வெள்ளி என்றும். அவர் உயிர்தெழுந்த நாளை ஈஸ்டர் பண்டிகையாகவும் உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் அனுசரித்து வருகின்றனர். இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படுவதற்கு முதல்நாள் இரவு தனது சீடர்களுக்கு ராப்போஜன விருந்து அளித்தார். அப்போது சீடர்களுக்கு தாழ்மையாக இருக்க வேண்டுமென்பதையும், யாரும் பெரியவர்கள் அல்ல என்பதையும் வலியுறுத்தும் விதமாகமாக சீடர்களின் பாதங்களை கழுவி முத்தமிட்டார்.
இதனை ஒவ்வொரு ஆண்டும் நினைவு கூறும் விதமாக கிறிஸ்தவ தேவயாலங்களில் புனித வெள்ளிக்கு முதல் நாளான வியாழக்கிமையன்று திருப்பலி நேரத்தில் இறைமக்களின் பாதங்களை கழுவி திருவிருந்து வழங்குவது நடந்து வருகிறது. அதன்படி தூத்துக்குடி சின்னகோவில் என்று அழைக்கப்படும் திரு இருதயங்களின் பேராலயத்தில் ஆயர் அந்தோணி ஸ்டீபன், இறைமக்களின் பாதங்களை கழுவி முத்தமிட்டு நற்கருணை வழங்கினார்.
இதே போல் தூத்துக்குடி லூர்தம்மாள்புரம் லூர்து அன்னை ஆலயத்திலும் பங்குத்தந்தை ஆன்றனி ப்ரூனோ தலைமையில், அருள்தந்தை ஸ்டார்வின் முன்னிலையில் இறைமக்களின் பாதங்களை கழுவி முத்தமிட்டு நற்கருணை வழங்கி. சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதைப்போல் தூத்துக்குடியில் உள்ள பனிமய மாதா பேராலயம், அந்தோணியார் கோவில் ஆலயம் உள்ளிட்ட பல்வேறு கிறிஸ்தவ ஆலயங்களில் பாதங்களை கழுவும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.