» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் அம்மன் கோவில்களில் சூரசம்காரம் : திரளான பக்தர்கள் தரிசனம்
வியாழன் 6, அக்டோபர் 2022 8:09:51 AM (IST)
தூத்துக்குடியில் நவராத்திரி விழாவை முன்னிட்டு 25 அம்மன் கோவில்களில் சூரசம்காரம் நடந்தது.
தூத்துக்குடியில் உள்ள சந்தன மாரியம்மன் கோவில் உச்சினிமாகாளி அம்மன் கோவில் தெப்பக்குளம் மாரியம்மன் கோவில் பத்ரகாளியம்மன் கோவில் உள்பட 25 அம்மன் கோவில்களில் நவராத்திரி விழா 26ம் தேதி அதிகாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் அம்மன் பல்வேறு அலங்காரங்களில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். மேலும் அம்மனுக்கு தினமும் சிறப்பு பூஜைகள் நடந்து வந்தன. விழாவின் சிகர நிகழ்ச்சியாக சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நேற்று மாலையில் நடந்தது.
தூத்துக்குடி தெப்பக்குளம் மாரியம்மன் கோவில் வளாகத்திற்குள் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடந்தது. நரகாசுரனின் 7 தலைகள் சூரசம்ஹாரம் செய்யப்பட்டது. இதில் சூரன் தலை, கஜமுகன் தலை, சிங்கம் தலை, மான் தலை, ரிஷி முகம் தலை, நரகாசுரன் தலை இறுதியாக மகிஷாசூரன் தலை வெட்டப்பட்டு அம்மனின் பாதத்தில் வைக்கப்பட்டது. பின்னர் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் தீபாரதனை நடந்தது. இந்நிகழ்ச்சியில் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தார்.
தூத்துக்குடி மேலூர் பத்திரகாளியம்மன் கோவில் சூரசம்ஹார நிகழ்ச்சி கோவில் வளாகத்தில் நடந்தது. அம்மன் சிம்ம வாகனத்தில் ஏறி கஜமுகாசூரன், மகிஷாசூரன் உள்ளிட்ட சூரன்களை அம்மன் வதம் செய்தார். அதுபோல் வடபாகம் சந்தணமாரியம்மன் கோவில், சண்முகபுரம் பத்திரகாளியமன், உள்பட மாநகரில் உள்ள 25 அம்மன் கோவில்களிலும் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட எஸ்பி பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில் டி.எஸ்.பி. சத்தியராஜ் மேற்பாற்வையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அமைச்சர் கீதாஜீவன் சுவாமி தரிசனம்
தூத்துக்குடியில் பிரதிபெற்ற தெப்பகுளம் மாரியம்மன் கோவில், முத்தாரம்மன் கோவில், கிராமதேவதை மேலூர் பத்திரகாளியம்மன் ஆகிய கோவில்களில் சூரசம்ஹார விழா நடைபெற்றது. இதையொட்டி நடைபெற்ற சிறப்பு பூஜையில் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் கலந்து கொண்டு தரிசனம் செய்தார்.
விழாவில் மாவட்ட திமுக தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் அபிராமிநாதன், வட்ட செயலாளர்கள் கீதா செல்வமாரியப்பன், கங்காராஜேஷ், முத்தாரம்மன் கோவில் தலைவர் சோமநாதன், செயலாளரும் மாவட்ட திமுக பிரதிநிதியுமான சக்திவேல், பொருளாளரும் அதிமுக வட்டச் செயலாளருமான திருச்சிற்றம்பலம், முன்னாள் கவுன்சிலர்கள் கந்தசாமி, செந்தில்குமார், முன்னாள் அறங்காவலகுழு உறுப்பினர் அறிவழகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.