» செய்திகள் - விளையாட்டு » அரசியல்
மத்திய அரசு வழங்கிய ரூ.3,000 கோடி நிதி என்ன ஆனது?: தமிழக அரசுக்கு அண்ணாமலை கேள்வி
வெள்ளி 24, பிப்ரவரி 2023 11:36:08 AM (IST)
அனைவருக்கும் கல்வி உரிமை திட்டத்துக்காக மத்திய அரசு வழங்கிய சுமாா் ரூ. 3 ஆயிரம் கோடி நிதி என்ன ஆனது? என்பதை தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அறிவிக்க வேண்டும் என தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை வலியுறுத்தினாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை: பொருளாதாரத்தில் பின்தங்கிய குழந்தைகளும் சிறப்பான கல்வி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் அனைவருக்கும் கல்வி உரிமை திட்டம் செயல்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்துக்கு 2021-2022-ஆம் ஆண்டில் ரூ.1,598 கோடியும், 2022-2023-ஆம் ஆண்டில் ரூ.1,421 கோடியும் மத்திய அரசு வழங்கியுள்ளது.
இந்த நிலையில், 2 ஆண்டுகளாக தமிழகப் பள்ளிகளில் மழலையா் வகுப்புக்கான நிதி வழங்கப்படவில்லை என தனியாா் பள்ளி சங்கங்கள் குற்றம்சாட்டியுள்ளன. இதனால் வரும் ஆண்டில் மாணவா் சோ்க்கை பாதிக்கப்படும் எனக் கூறப்படுகிறது. எனவே, இந்தத் திட்டத்துக்காக 2 ஆண்டுகளில் ஒதுக்கப்பட்ட நிதி என்ன ஆனது? என்பதை தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.
ஏழை, எளிய மாணவா்கள் கல்வி பெறுவதைத் தடுக்க முயற்சிக்காமல், உடனடியாக கல்வி கட்டண நிலுவைத் தொகையை பள்ளிகளுக்கு வழங்கி நடப்பு ஆண்டில் மாணவா் சோ்க்கையை உறுதி செய்ய வேண்டும். மேலும், தமிழகத்தில் பாழடைந்த பள்ளிக் கட்டடங்களின் தற்போதைய நிலை என்ன என்பதையும் அமைச்சா் விளக்க வேண்டும் என்று அவா் தெரிவித்துள்ளாா்.