» செய்திகள் - விளையாட்டு » மருத்துவம்

கொழுப்பைக் கரைக்க கற்றாழை ஜூஸ்: யாரெல்லாம் குடிக்கலாம்?



கற்றாலையை சாப்பிட்டால் உடலுக்கு புத்துணர்ச்சி அளிக்கும், பல்வேறு நன்மைகள் கிடைக்கும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். 

கிளியோபாட்ரா முதல் காஜல் அகர்வால் வரை அனைவருக்கும் பிடித்த அற்புத மூலிகை, கற்றாழை. ஆலோவேரா (Aloe vera) என்ற தாவரவியல் பெயர் கொண்ட கற்றாழை அழகு, ஆரோக்கியம் மற்றும் உணவு வணிகத்தில் கோலோச்சி வரும் காயகற்ப மூலிகை. ஆப்பிரிக்காவை தாயகமாகக் கொண்ட கற்றாழை ஆசியா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பா போன்ற நாடுகளில் வளர்கிறது. இந்தியாவில் ராஜஸ்தான், மகாராஷ்டிரா மற்றும் தமிழ்நாட்டில் அதிகமாகச் சாகுபடி ஆகிறது. தமிழ்நாட்டில் சேலம் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் இது அதிகம் பயிரிடப்படுகிறது.

கற்றாழைக்குக் கன்னி, குமரி என்ற பெயர்களும் உண்டு. கற்றாழையில் சிறு கற்றாழை, பெரும் கற்றாழை, செங்கற்றாழை, பேய்க்கற்றாழை, கருங்கற்றாழை, வரிக்கற்றாழை எனப் பல வகை உண்டு. இவற்றில் சோற்றுக்கற்றாழை மட்டுமே மருத்துவப் பயன்பாட்டில் உள்ளது. கற்றாழையின் இலைக் கதுப்பு (ஜெல்) மற்றும் வேர், மருத்துவப் பயன்களைக் கொண்டவை. 

உச்சி முதல் உள்ளங்கால் வரை உள்ள அத்தனை உறுப்புகளுக்கும் உகந்த ஒரு மூலிகைப் பொக்கிஷம் இது. பன்னிரண்டுக்கும் மேலான பினோலிக் கலவைகள் இதில் உள்ளன. மனித குலத்துக்குத் தேவையான 22 அமினோ அமிலங்களில் 20 அமினோஅமிலங்கள் இதில் உள்ளன. இவை தவிர வைட்டமின் ஏ, ஈ மற்றும் சி இதில் உள்ளன. கால்சியம், பொட்டாசியம், தாமிரம் போன்ற தாதுச் சத்துகளோடு மிக அரிய தாதுகளான செலினியம், குரோமியம் ஆகியவையும் இதில் அடங்கியுள்ளன.

சோற்றுக் கற்றாழைதான் பெஸ்ட்!

கற்றாழையில் சோற்றுக் கற்றாழைதான் உணவாகப் பயன்படுத்தப்படுகிறது. மிகச் சாதாரணமாகக் கிடைப்பதும் சோற்றுக் கற்றாழைதான் என்பதால் அதைத்தான் எல்லோரும் பயன்படுத்துகிறார்கள். எல்லாக் கற்றாழைகளையும்விட செங்கற்றாழை அதிக மருத்துவக் குணம் வாய்ந்தது என்றாலும் அது இப்போது கிடைப்பதில்லை. மற்ற கற்றாழை வகைகளும் கிடைப்பதில்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாகக் கிடைக்கும் வேறு சில கற்றாழைகள் வெளி உபயோக மருந்தாகப் பயன்படுத்தப்படும் மருந்துப் பொருள்களில் சேர்க்கப்படுகிறது.

சோற்றுக் கற்றாழைதான் பெஸ்ட்! கற்றாழையை முறைப்படி பொடியாக்கிச் சாப்பிட்டால் நூறு ஆண்டுகள் இளமையாக வாழலாம் எனத் தேரன் வெண்பா கூறுகிறது. உடலுக்குத் தேவையான நீர்த்துவத்தைக் கொடுத்து உடலின் நச்சுத்தன்மையை அகற்றும் குணம் இதன் மகத்துவம். தவிர, ஈரல் மற்றும் குடல்களின் செயல்பாட்டைச் சரி செய்யக்கூடியது. சருமம் காக்கும் தோழன் இது. உடல் சூட்டைத் தணிப்பதில் கற்றாழைக்கு நிகர் கற்றாழையே. பெண்களின் கருப்பை மற்றும் தொடை எலும்புகள் இடுப்பில் இணையும் பகுதியான கூபக உறுப்புகளில் வரும் நோய்களுக்கும், ஆண்களின் விந்தணு உற்பத்திக்கும் கைகண்ட மருந்து இது. உடல் பருமனைக் குறைக்கவும் பெரிதும் உதவும் மருந்து.

இன்று உடற்பயிற்சிக்காக நடப்பவர்களைவிட உடல்பருமனைக் குறைக்க நடப்பவர்களே அதிகம். அதனால்தான் நடைப்பயிற்சிக்காக மக்கள் குவியும் அத்தனை இடங்களிலும் கற்றாழை ஜூஸ் வியாபாரம் கன ஜோராக நடக்கிறது. நடைப்பயிற்சியுடன் கற்றாழை ஜூஸ் குடிக்கக் கிடைத்தால் இரட்டை நன்மைதானே! கலோரி மற்றும் கொழுப்பைக் கரைக்க கற்றாழை மிகவும் நல்லது.

சரி, சாலையோரத் தள்ளுவண்டிக் கடைகளிலும் ஜூஸ் கடைகளிலும் விற்கப்படும் கற்றாழை ஜூஸ் உண்மையிலேயே ஆரோக்கியமானதா என்றால், இல்லை என்றே சொல்லலாம். காரணம், பெரும்பாலான ஜூஸ் கடைகளில் கற்றாழையின் தோலை மட்டும் அகற்றிவிட்டு அதன் உள்ளே இருக்கும் ஜெல்லை கழுவாமல் அப்படியே போட்டு இடித்து நசுக்கி மோர், உப்பு சேர்த்துக் கொடுக்கிறார்கள். ஆனால், கற்றாழை ஜெல்லை கழுவாமல் சாப்பிடக்கூடாது. கற்றாழை ஜூஸ் எப்படித் தயார் செய்ய வேண்டும், யாரெல்லாம் குடிக்கலாம் என்பது மிகவும் முக்கியம்.

எப்படித் தயார் செய்வது?

நான்கு ஆண்டுகள் வளர்ந்த கற்றாழைச் செடிகளின் இலைகள் முற்றியதாக இருக்கும். அவற்றில்தான் அத்தனை சத்துகளும் பொதிந்திருக்கும். அவற்றை மட்டுமே நாம் சாப்பிட வேண்டும். கற்றாழைச் செடியின் வெளிப்புறமாக வளரும் மடல்கள் முதிர்ச்சி அடைந்திருக்கும். அவற்றை நறுக்கி எடுத்து, அதிலுள்ள மஞ்சள் நிறப் பாலை முழுமையாக வடிக்க வேண்டும். பிறகு அதன் தோலை அகற்றிவிட்டு, உள்ளே இருக்கும் வழவழப்பான ஜெல்லை எடுத்து, ஏழு முறை நீரில் கழுவ வேண்டும். ஏழு முறை கழுவும்போதுதான் அதிலுள்ள அலோனின் என்ற வேதிப்பொருள் நீங்கும். இல்லாவிட்டால் அது வயிற்றின் உள்ளே செல்லும்போது வயிற்றுப்போக்கு மற்றும் வயிற்று எரிச்சல் உண்டாகும். மேலும் ஏழுமுறை கழுவினால்தான், கற்றாழையின் கசப்புச் சுவை மற்றும் நாற்றமும் விலகும்.

இப்படியெல்லாம் குடிக்கலாம் கற்றாழை ஜூஸ்!

1. காலையில் வெறும் வயிற்றில் குடிக்கலாம். அப்போது சிறிது வெதுவெதுப்பான நீரில் கலந்து குடிப்பது நல்லது.

2. காலை வெறும் வயிற்றில் குடிக்கும்போது சிறிது எலுமிச்சைச் சாறு சேர்த்துக் குடிப்பது நல்லது.

3. கற்றாழைச் சாற்றுடன் பனங்கற்கண்டு அல்லது பனைவெல்லம் சேர்த்துக் குடித்தால் எந்த மருத்துவத்துக்கும் அசராத வறட்டு இருமல் நம்மை விட்டு வேகமாக விலகும்.

4. நாட்டுச் சர்க்கரையுடன் சேர்த்துக் குடித்தால் மாதவிலக்கு தொடர்பான பிரச்னைகள் நீங்கும்.

கற்றாழை ஜெல்லைக் கழுவாமல் சாப்பிடக் கூடாது!

5. மோர் சேர்த்துக் குடித்தால் உடல் சூடு தணியும். இது வெயில் காலத்தின் அமுது. வெயிலால் தோலுக்கு உண்டாகும் ஒவ்வாமை மற்றும் முகத்தில் வரக்கூடிய கருந்திட்டுகள் நீங்கும்.

6. கற்றாழையுடன் ஒரு டீஸ்பூன் இஞ்சிச் சாறு சேர்த்துக் குடித்தால் மலச்சிக்கல் நீங்கும். உடலில் உள்ள கொழுப்பு கரையும், பித்தமும் குறையும்.

7. பசுந்தயிரை மோராக்கி அதனுடன் சிறிது உப்பு, பெருங்காயம் மற்றும் இஞ்சி சேர்த்துக் கற்றாழை ஜெல்லை கலந்து மிக்ஸியில் அடித்துக் குடிக்கலாம்.

இதில் எந்த வகையில் தயார் செய்து குடித்தாலும், அதைத் தயாரித்த அரை மணி நேரத்துக்குள் ஃப்ரெஷ்ஷாகக் குடித்துவிட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. அதற்கு மேல் தாமதப்படுத்திக் குடித்தால், பலன் தராது. மேலும், கற்றாழை ஜூஸ் குடித்த ஒரு மணி நேரம் வரை வேறு எந்த உணவும் உண்ணாமல் இருப்பது நல்லது. கற்றாழை ஜூஸை மாலை நேரங்களிலும் குடிக்கலாம்.


* சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள், சர்க்கரை நோய்க்கான மருந்து சாப்பிட்டதும் கற்றாழை ஜூஸ் அருந்தக் கூடாது. கற்றாழை, ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் குறைக்கும் என்பதால் அவர்களுக்குச் சர்க்கரை அளவு மிகவும் குறைந்துபோக வாய்ப்புள்ளது.

* சர்க்கரைநோய், ரத்த அழுத்தம், ரத்தம் உறைதல் போன்றவற்றுக்கு மருந்து எடுத்துக் கொள்பவர்கள், கற்றாழை ஜூஸ் குடிக்க வேண்டாம். கற்றாழையும் ரத்தம் உறைதலைத் தடுக்கும் தன்மை கொண்டது என்பதால், சம்பந்தப்பட்டவர்களுக்கு அதிக ரத்தப்போக்கு உண்டாக வாய்ப்புள்ளது. எனவே, குடும்ப மருத்துவரை ஆலோசித்த பிறகே இவர்கள் கற்றாழை ஜூஸ் குடிக்க வேண்டும்.

* நாள்பட்ட நோய்களுக்கு ஆங்கில மருந்து எடுத்துக்கொள்பவர்கள், கர்ப்பிணிகள், பிரசவித்த பெண்கள், ஒவ்வாமை பிரச்னை உடையவர்கள் கற்றாழை ஜூஸ் அருந்த வேண்டாம்.

மொத்தத்தில், ஒருவரின் ஆரோக்கிய உடல்நிலையைப் பொறுத்து 1 - 6 வாரங்கள் வரை கற்றாழை ஜூஸ் அருந்தலாம். பிறகு ஓரிரு மாதங்கள் இடைவெளிவிட்டு, மீண்டும் தொடரலாம். காலை நேர நடைப்பயிற்சியுடன் கசப்பு, புளிப்பு சேர்ந்து கடைசியில் நாவுக்குப் பிடித்த இனிப்புச் சுவையையும் தரும் கற்றாழை ஜூஸ், உடலுக்கு எல்லா நன்மைகளையும் செய்யும்; புத்துணர்வும் புதுப்பொலிவும் தரும்!


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Arputham Hospital






Thoothukudi Business Directory