» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

விசிக நிர்வாகி அடித்துக் கொலை: மனைவி, கள்ளக்காதலன் உள்பட 3 பேர் கைது!

திங்கள் 24, ஆகஸ்ட் 2026 12:11:30 PM (IST)

கடலூர் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி அடித்துக் கொலை செய்யப்பட்டு உடலைக் கிணற்றில் வீசிய வழக்கில், அவரது மனைவி, கள்ளக்காதலன் உள்பட 3 பேரைச் சிறுபாக்கம் காவல்துறையினர் கைது செய்தனர்.

கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள ஒரங்கூர் கிராமத்தைச் சேர்ந்தவர் இளையராஜா (39). இவர் விசிக ஒரங்கூர் முகாம் செயலாளராகப் பணியாற்றி வந்தார். இவருக்கும் பட்டாக்குறிச்சியைச் சேர்ந்த அஸ்வினிதா (30) என்பவருக்கும் கடந்த 2016-ல் திருமணமாகி விஷ்ணு (10), மிதுன் (8) ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.

கடந்த 12-ஆம் தேதி ஒரங்கூர் கிராமத்தில் உள்ள பெரியசாமி என்பவரது விவசாயக் கிணற்றில் இளையராஜா மர்மமான முறையில் பிணமாகக் கண்டெடுக்கப்பட்டார். இது குறித்துச் சிறுபாக்கம் போலீசார் சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இளையராஜாவின் மனைவி அஸ்வினிதாவின் பேச்சிலும் நடவடிக்கையிலும் சந்தேகமடைந்த காவல்துறையினர், அவரது செல்போன் அழைப்புகள் மற்றும் அப்பகுதியின் சிசிடிவி காட்சிகளை ரகசியமாக ஆய்வு செய்தனர்.

அதில், இளையராஜாவின் சித்தி மகனான பெரம்பலூர் மாவட்டம் இனாம் அகரத்தைச் சேர்ந்த கனகராஜ் மகன் வெங்கடேசன் (32) என்பவருடன் அஸ்வினிதா மணிக்கணக்கில் போனில் பேசியது தெரியவந்தது. காவல்துறையினர் நடத்திய தீவிர விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியான.

உறவினர் முறையில் வீட்டிற்கு வந்து சென்ற வெங்கடேசனுக்கும் அஸ்வினிதாவுக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. இதனை அறிந்த இளையராஜா இருவரையும் பலமுறை கண்டித்தும் அவர்கள் தொடர்பைக் கைவிடவில்லை.

கடந்த 11-ஆம் தேதி இளையராஜா, வெங்கடேசனை மது அருந்த அழைத்துள்ளார். வெங்கடேசன் தனது நண்பர் செல்வம் (23) என்பவருடன் காரில் வந்து, 3 பேரும் சேர்ந்து மரத்தடியில் அமர்ந்து மது அருந்தியுள்ளனர். அப்போது போதையில் இளையராஜா, மனைவியுடனான தொடர்பைக் கண்டித்து வெங்கடேசனுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

இதில் ஆத்திரமடைந்த வெங்கடேசன், இளையராஜாவைச் சரமாரியாக அடித்துக் கொலை செய்துள்ளார். கொலையை மறைக்கத் திட்டமிட்ட வெங்கடேசனும் செல்வமும், இளையராஜாவின் உடலைக் காரில் ஏற்றிச் சென்று விபத்தில் இறந்தது போல் நாடகமாட முயன்றனர்.

பின்னர், இளையராஜாவின் ஸ்கூட்டரையும் எடுத்துக்கொண்டு ஒரங்கூர் பகுதிக்கு வந்து, ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள பெரியசாமியின் கிணற்றில் உடலை வீசியுள்ளனர். மேலும், ஸ்கூட்டரை கிணற்றின் சுவரில் மோதி கீழே விழுந்தது போல் போட்டுவிட்டுத் தப்பியோடியுள்ளனர்.

உண்மையை மீட்டெடுத்த சிறுபாக்கம் காவல்துறையினர், சந்தேக மரண வழக்கைக் கொலை வழக்காக மாற்றினர். இக்கொலை தொடர்பாக கள்ளக்காதலன் வெங்கடேசன் (32),கொலையாளிக்கு உதவிய நண்பன் செல்வம் (23), கொலைக்கு உடந்தையாக இருந்த மனைவி அஸ்வினிதா (30) ஆகிய 3 பேரையும் காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Thoothukudi Business Directory