» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

சொரிமுத்து அய்யனார் கோயிலில் சுவாமி மாலையைத் தன் கழுத்தில் அணிந்த பூசாரி சஸ்பெண்ட்!

செவ்வாய் 18, ஆகஸ்ட் 2026 12:15:13 PM (IST)

SorimuthPoosari.jpg

நெல்லை மாவட்டம் பாபநாசம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற சொரிமுத்து அய்யனார் கோயிலில், பக்தர் வழங்கிய காணிக்கை மாலையைத் தன் கழுத்தில் அணிந்து வலம் வந்த பூசாரி அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

கடந்த மே மாதம் திண்டுக்கல்லைச் சேர்ந்த தாமோதரன் என்ற பக்தர், சொரிமுத்து அய்யனார் மற்றும் ஸ்ரீ பூர்ணகலா புஷ்கலா உருவப்படம் பொறிக்கப்பட்ட ரூ.26,000 மதிப்பிலான ஐம்பொன் சங்கிலியை கோயிலுக்குக் காணிக்கையாகச் செலுத்தியுள்ளார். சாமி சிலைக்குச் சாத்தப்பட்டிருந்த அந்தச் சங்கிலி சிறிது சேதமடைந்ததாகக் கூறப்படுகிறது. 

இதனைச் சீர் செய்வதற்காகக் கோயில் நிர்வாகத்திற்கு முறையாகத் தெரிவிக்காமல், பூசாரி பிச்சையா என்பவர் செந்தில் என்ற மற்றொரு பூசாரியிடம் நகையைக் கொடுத்துள்ளார். கடந்த 11-ஆம் தேதி நடைபெற்ற ஆடி அமாவாசை திருவிழாவின் போது, பூசாரி செந்தில் சாமிக்குரிய அந்த ஐம்பொன் சங்கிலியைத் தனது கழுத்தில் அணிந்துகொண்டு பக்தர்களுக்குப் பிரசாதம் வழங்கி வலம் வந்துள்ளார்.

இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியதை அடுத்து, நகையைக் காணிக்கையாக அளித்த பக்தர் தாமோதரன் கோயில் நிர்வாகத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் கோயில் நிர்வாக அலுவலர் இளங்குமரன் மேற்கொண்ட விசாரணையில், காணிக்கை நகையைப் பூசாரி செந்தில் தனது கழுத்தில் அணிந்தது அப்பட்டமாக உறுதி செய்யப்பட்டது.

இந்து சமய அறநிலையத் துறையின் நெல்லை மண்டல இணை ஆணையர் கவிதா பிரியதர்ஷினி உத்தரவின் பேரில், பூசாரி செந்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். கோயில் நிர்வாக அனுமதியின்றி நகையை வெளிநபரிடம் கைமாற்றிய பூசாரி பிச்சையா மீதும் துறைரீதியான கடும் நடவடிக்கை பாயும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வதந்திக்கு முற்றுப்புள்ளி:

சமூக வலைதளங்களில் இந்த மாலை '200 கிராம் தங்கம்' என பரப்பப்பட்டு வரும் வதந்திகளுக்கு விளக்கம் அளித்த செயல் அலுவலர் இளங்குமரன், பக்தர் வழங்கியது ரூ.25,000 மதிப்பிலான ஐம்பொன் மாலை மட்டுமே என்றும், இதுகுறித்த தீவிர விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Thoothukudi Business Directory