» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பைக் மீது மோதி ஆற்றுக்குள் பாய்ந்த ஆம்னி பேருந்து: இருவர் உயிரிழப்பு - பயணிகள் மீட்பு!

செவ்வாய் 17, மார்ச் 2026 8:39:43 AM (IST)

தக்கலை அருகே பைக் மீது மோதிய ஆம்னி பேருந்து கட்டுப்பாட்டை இழந்து ஆற்றுக்குள் பாய்ந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற 2பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடை அருகே உள்ள பைங்குளத்தைச் சேர்ந்த விஜய் (28) மற்றும் அவரது உறவினர் சுரேஷ்குமார் (41). வெல்டிங் தொழிலாளிகளான இவர்கள் இருவரும், நேற்று காலை மோட்டார் சைக்கிளில் வேலைக்காக நாகர்கோவில் நோக்கிச் சென்று கொண்டிருந்தனர்.

தக்கலை அருகே குமாரகோவில் சந்திப்பைத் தாண்டி தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது, பெங்களூருவிலிருந்து திருவனந்தபுரம் நோக்கி வந்த ஆம்னி பேருந்து திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடியது. கண்ணிமைக்கும் நேரத்தில் விஜய் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதிய பேருந்து, அருகில் இருந்த விளம்பரப் பலகைகளை உடைத்துக்கொண்டு ஆற்றுக்குள் பாய்ந்தது.

இந்த விபத்தில் பலத்த காயமடைந்த விஜய் மற்றும் சுரேஷ்குமார் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தனர். அதே நேரத்தில், ஆற்றுக்குள் பாய்ந்த பேருந்திற்குள் இருந்த 25 பயணிகள் அச்சத்தில் அலறினர்.

தகவலறிந்து தக்கலை தீயணைப்பு நிலைய அலுவலர் ஜீவன்ஸ் தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். பேருந்தின் பக்கவாட்டுக் கண்ணாடிகளை உடைத்து, உள்ளே சிக்கியிருந்த பயணிகளைப் பத்திரமாக மீட்டனர். இதில் சிலருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டன.

மாவட்ட ஆட்சியர் அழகு மீனா மற்றும் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் ஆகியோர் விபத்து நடந்த இடத்திற்கு நேரில் வந்து விசாரணை நடத்தினர். துணைக் காவல் கண்காணிப்பாளர் பார்த்தீபன் தலைமையிலான போலீசார், பலியானவர்களின் உடல்களை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காகத் தக்கலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆற்றுக்குள் கிடந்த பேருந்து கிரேன் மூலம் மீட்கப்பட்டது.

ஓட்டுநரின் தூக்கக் கலக்கமே விபத்திற்குக் காரணம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இது குறித்துப் பெறப்பட்ட புகாரின் அடிப்படையில், கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த பேருந்து ஓட்டுநர் ஷிபின் (36) என்பவரைப் போலீசார் கைது செய்தனர்.

பலியான விஜய் வெளிநாட்டிலிருந்து திரும்பி, கடந்த 10 மாதங்களுக்கு முன்புதான் திருமணம் செய்துகொண்டார். அவரது மனைவி அனு தற்போது 5 மாத கர்ப்பிணியாக உள்ளார். இதேபோல் சுரேஷ்குமாருக்கு மனைவியும் 5 வயது மகனும் உள்ளனர். உழைத்து வாழச் சென்ற தொழிலாளர்கள் விபத்தில் சிக்கி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital







Thoothukudi Business Directory