» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
ஜல் ஜீவன் திட்டத்திற்கு நிதி விடுவிக்க வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
வெள்ளி 13, மார்ச் 2026 4:14:42 PM (IST)
ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை உடனடியாக விடுவிக்க வேண்டுமென்று முதல்வர் ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
தமிழ்நாட்டில் கிராமப்புறங்களில் நிலையான மற்றும் சம அளவில் குடிநீர் வழங்குவதை உறுதி செய்திட ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை உடனடியாக விடுவிக்கவும், ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்திற்கு (கட்டம்-3) ஒப்புதலையும், நிதியுதவியையும் வழங்கிட வேண்டுமென்றும் முதல்வர் ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இது குறித்து முதல்வர் எழுதியுள்ள கடிதத்தில், "தமிழ்நாட்டிலுள்ள அனைத்துப் பகுதிகளுக்கும் பாதுகாப்பான மற்றும் நம்பகமான குடிநீர் வழங்குவதில் தமிழ்நாடு தொடர்ந்து முன்னணியில் உள்ளது. கிராமப் பகுதிகளிலுள்ள 1.25 கோடி வீடுகளில், 1.12 கோடி வீடுகளுக்கு செயல்பாட்டில் இருக்கும் குழாய்கள் மூலம் இணைப்புகளை வழங்கி, ஜல் ஜீவன் திட்டத்தில் தமிழ்நாடு பெருத்த முன்னேற்றத்தைச் சாதித்துள்ளது. இதற்கிடையில் இந்த இயக்கத்தினை மேலும் விரிவாக்க ஒன்றிய அரசு எடுத்துள்ள முடிவினை வரவேற்கிறோம்.
ஜல் ஜீவன் மிஷன் இயக்கத்தின் முதல் கட்டத்தில், தமிழ்நாடு 45 புதிய பல கிராமங்களை உள்ளடக்கிய கூட்டுக் குடிநீர்த் திட்டங்களையும், 56 பழைய கூட்டுக் குடிநீர்த் திட்டங்களையும் மற்றும் 21,258 ஒற்றை கிராமத் திட்டங்களையும் மொத்தமாக 18,123 கோடி ரூபாய் செலவில் எடுத்துள்ளோம். அவற்றில் அனைத்து ஒற்றை கிராம குடிநீர்த் திட்டங்கள், பல கிராமங்களை அடக்கிய 101 கூட்டுக் குடிநீர்த் திட்டங்கள் மற்றும் பழைய குடிநீர்த் திட்டங்களில் புனரமைப்புத் திட்டங்களாக 92 திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மீதமுள்ள 9 கூட்டுக் குடிநீர்த் திட்டங்கள் நடைமுறையில் முன்னேற்றத்தில் உள்ளன. ஆனால், ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் ஒன்றிய அரசின் பங்கு என ரூபாய் 5,914 கோடி மட்டுமே விடுவிக்கப்பட்டுள்ளது, மேலும் ரூபாய் 3,112 கோடி நிலுவையில் உள்ளது. 2024–25 ஆண்டுக்காக தமிழ்நாட்டிற்கு ரூபாய் 2,434 கோடி ஒதுக்கப்பட்ட போதிலும், ரூ.732 கோடி மட்டுமே விடுவிக்கப்பட்டுள்ளது. 2024 செப்டம்பர் முதல் எந்த நிதியையும் ஒன்றிய அரசிடமிருந்து தமிழ்நாடு அரசு பெறவில்லை.
ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் குடிநீர்த் திட்டங்களில் பணிகளின் முன்னேற்றத்தை நிலைநாட்டுவதற்கும், உரிய காலத்தில் இந்தத் திட்டத்தினை நிறைவேற்றுவதை உறுதி செய்வதற்கும் தமிழ்நாடு அரசு தனது சொந்த நிதியிலிருந்து 2,550 கோடி ரூபாயை விடுவித்துள்ளது.
நடைமுறையில் உள்ள ஜல் ஜீவன் மிஷன் திட்டங்களின் நிறைவேற்றத்தை உறுதி செய்திட ஏதுவாக நிலுவைத் தொகையான 3,112 கோடி ரூபாய் நிதியை உடனடியாக விடுவிக்க, தாமதமின்றி பிரதமர் தலையிட வேண்டும்.
மேலும் ஜப்பான் பன்னாட்டு நிதியுதவியுடன் செயல்படுத்த உத்தேசிக்கப்பட்ட ஒகேனக்கல் (கட்டம்-3) கூட்டுக் குடிநீர்த் திட்டம் ரூ.8,428 கோடி செலவில் செயல்படுத்திட ஜல் சக்தி அமைச்சகத்தின் மாநிலத் திட்ட அனுமதி குழுவில் 15.06.2023 அன்று அனுமதிக்கப்பட்டது. அதில் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் ஒன்றிய அரசின் பங்காக ரூ.2,283 கோடி அனுமதிக்கப்பட்டது.
ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் ஒன்றிய அரசால் வழங்கப்பட்ட உறுதியின் அடிப்படையில், தமிழ்நாடு அரசு இத்திட்டத்தில் முன்னெடுப்புப் பணிகளை தொடங்கியது. ஆனால் ஒன்றிய குடிநீர் மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்புத் துறை, இத்திட்டத்தினை நீட்டிக்க அனுமதி பெறும் வரை, ஒன்றிய அரசின் உதவியை தற்போது வழங்க இயலாது எனக் குறிப்பிட்டுள்ளது, இந்த முக்கியமான திட்டத்திற்கு இந்தக் கட்டத்தில் ஒன்றிய அரசு தனது ஆதரவிலிருந்து பின்வாங்குவது என்பது, கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி மாவட்டங்களில் மக்களுக்குப் போதுமான குடிநீர் வழங்குவதை பாதிக்கும்.
ஒன்றிய அரசின் சமீபத்திய ஜல் ஜீவன் திட்டத்தினை விரிவாக்கம் செய்யும் முடிவினைக் கருத்தில் கொண்டு, ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்திற்கு (கட்டம்-3) ஒப்புதலையும், நிதியுதவியையும் வழங்கிட வேண்டும். அப்போதுதான் தமிழ்நாடு அரசு ஜப்பான் பன்னாட்டு முகமையுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தினை தொடர இயலும். அதோடு, கூடுதலாக 10 புதிய கூட்டுக் குடிநீர்த் திட்டங்களை சுமார் 7,590 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்திட திட்டமிடப்பட்டுள்ளது.
இதில் திண்டுக்கல், நாமக்கல், திருச்சி, கரூர், திருவள்ளூர், புதுக்கோட்டை, மயிலாடுதுறை, தென்காசி, தூத்துக்குடி, திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்கள் உள்ளடக்கியுள்ளதாகவும், இந்தப் புதிய கூட்டுக் குடிநீர்த் திட்டங்களுக்கு ஜல் ஜீவன் 2.0 திட்டத்திற்கு நிதி ஒப்பளிப்பு செய்திட வேண்டும்.
தமிழ்நாட்டில் கிராமப்புறங்களில் நிலையான மற்றும் சம அளவில் குடிநீர் வழங்குவதை உறுதி செய்திட ஏதுவாக, ஒன்றிய அரசு தனது ஆதரவை தொடர்ந்து தரும் என நம்புகிறேன். பிரதமரின் ஆதரவினையும், விரைவான தலையீட்டினையும் எதிர்பார்க்கிறோம்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வாக்குச்சாவடி மறுசீரமைப்பு, தேர்தல் கூட்டங்கள் : அரசியல் கட்சிகளுடன் ஆட்சியர் ஆலோசனை!
வெள்ளி 13, மார்ச் 2026 5:41:13 PM (IST)

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு புதிய ரயில் சேவைகள், மாற்றங்கள்: பயணிகள் கோரிக்கை
வெள்ளி 13, மார்ச் 2026 5:27:51 PM (IST)

அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம்: புதிய கட்சியை அறிவித்தார் சசிகலா
வெள்ளி 13, மார்ச் 2026 4:47:08 PM (IST)

குரூப் 2 முதன்மை தேர்வுக்கு 9 மணிக்கு மேல் வந்தால் அனுமதி கிடையாது: ஆட்சியர் அறிவிப்பு
வெள்ளி 13, மார்ச் 2026 12:53:27 PM (IST)

எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்!
வெள்ளி 13, மார்ச் 2026 12:13:57 PM (IST)

தமிழகத்தில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை: வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை!
வெள்ளி 13, மார்ச் 2026 12:10:01 PM (IST)







