» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
பால்கனியில் தவறி விழுந்த குழந்தையின் தாய் துாக்கிட்டு தற்கொலை
திங்கள் 20, மே 2024 5:40:22 PM (IST)
சென்னையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு அடுக்குமாடி குடியிருப்பில் பால்கனியில் இருந்து தவறி விழுந்த குழந்தை மீட்கப்பட்ட நிலையில், குழந்தையின் தாய் தற்போது தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திருவாரூரை சேர்ந்தவர் வெங்கடேஷ், (35). கோவை மாவட்டம், காரமடையை சேர்ந்தவர் ரம்யா (33); இருவரும் பிரபல ஐ.டி., நிறுவனத்தில் பணிபுரிந்தனர். ஏழு ஆண்டுகளுக்கு முன் காதலித்து, இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். சென்னை, திருமுல்லைவாயலில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்த இந்த தம்பதிக்கு 5 வயதில் ஒரு மகனும், 7 மாத ஒரு பெண் குழந்தையும் உள்ளனர்.
சில நாட்களுக்கு முன் இவர்களது 7 மாத பெண் குழந்தை, அடுக்குமாடி குடியிருப்பு மாடியில் உள்ள பால்கனி தகர ஷீட்டில் தவறி விழுந்தது. குழந்தையை அக்கம் பக்கத்தினர் இணைந்து மீட்டனர். குழந்தையை மீட்ட ஒவ்வொரு வினாடியும் சினிமா திகில் காட்சி போன்று இருந்தது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவ, பலரும் குழந்தையின் தாய்க்கு எதிராக கருத்துக்களை பதிவிட்டனர். இதனால், ரம்யா மிகுந்த மன அழுத்தத்தில் இருந்துள்ளார்.
ரம்யாவுக்கு ஒரு மாறுதல் வேண்டும் என்பதற்காக காரமடையில் உள்ள ரம்யாவின் பெற்றோர் வீட்டிற்கு, 10 நாட்களுக்கு முன் வெங்கடேஷ் அவரை அழைத்து வந்தார். இந்நிலையில், ரம்யாவின் பெற்றோர் திருமண விழாவில் பங்கேற்க வெளியே சென்றனர். கணவரும் வீட்டில் இல்லை. நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத போது, ரம்யா துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இரவில் வெங்கடேஷ் வீடு திரும்பிய போது ரம்யா துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. அவர் மன அழுத்தத்தால் தற்கொலை செய்து கொண்டாரா, வேறு காரணமா என்பது குறித்து காரமடை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.