» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
கோகுல்ராஜ் கொலை வழக்கு: பிறழ் சாட்சியாக மாறிய சுவாதி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு!
புதன் 30, நவம்பர் 2022 4:57:39 PM (IST)
கோகுல்ராஜ் கொலை வழக்கில் தவறான தகவலை அளித்ததாக சுவாதி மீது குற்றவியல் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த கல்லூரி மாணவர் கோகுல்ராஜ். இவர் கடந்த 2015-ம் ஆண்டு நாமக்கல் மாவட்டம் தொட்டிபாளையம் பகுதியில் ரெயில் தண்டவாளத்தில் பிணமாக கிடந்தார். அவர் சுவாதி என்பவரை காதலித்ததாகவும், இந்த விவகாரத்தில் ஆணவக்கொலை செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டது. கோகுல்ராஜ் கொலை செய்யப்பட்டதாக பதிவான வழக்கு உயர்நீதிமன்ற உத்தரவின்பேரில் மதுரை மாவட்ட சிறப்பு கோர்ட்டுக்கு மாற்றப்பட்டு விசாரிக்கப்பட்டது.
விசாரணை முடிவில், இந்த வழக்கில் கைதான யுவராஜ், அருண், குமார் என்ற சிவகுமார், சதீஷ்குமார், ரகு என்ற ஸ்ரீதர், ரஞ்சித், செல்வராஜ், சந்திரசேகரன், பிரபு, கிரிதர், ஆகிய 10 பேருக்கும் சாகும் வரை சிறை தண்டனை விதித்தும், 5 பேரை விடுதலை செய்தும் மதுரை மாவட்ட கோர்ட்டு கடந்த மார்ச் மாதம் 8-ந் தேதி தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து யுவராஜ் உள்ளிட்ட 10 பேரும் தங்களுக்கு விதித்த தண்டனையை ரத்து செய்யக்கோரி மதுரை ஐகோர்ட்டில் மேல்முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்தனர். இந்த மேல்முறையீட்டு மனுக்களை நீதிபதிகள் ரமேஷ், ஆனந்த்வெங்கடேஷ் ஆகியோர் விசாரித்து நேற்று பிறப்பித்த இடைக்கால உத்தரவில், தொடக்கத்தில் இந்த வழக்கின் முக்கிய சாட்சியாக சுவாதி இருந்துள்ளார்.
இதனால் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் அவரிடம் ரகசிய வாக்குமூலம் பெற்றுள்ளது. அதன்பின் அவர் முன் தெரிவித்த வாக்குமூலத்திற்கு எதிரான தகவல்களை தெரிவித்ததால் பிறழ்சாட்சியாக அறிவிக்கப்பட்டார். இடைப்பட்ட காலத்தில் ஏதோ நடந்திருக்கிறது என்பது தெரிகிறது. சுவாதியை மீண்டும் சாட்சி கூண்டில் ஏற்ற எங்கள் அதிகாரத்தை பயன்படுத்துவது அவசியமாகிறது. சுவாதியை போதுமான பாதுகாப்புடன் இந்த கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்த வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
அதன்படி கடந்த 25ம் தேதி கோகுல்ராஜ் கொலை வழக்கு நீதிபதிகள் ரமேஷ், ஆனந்தராஜ் ஆகியோர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் முன்பு சுவாதி ஆஜரானார். அப்போது சுவாதி பிறழ் சாட்சி அளித்தார். இதனால் சுவாதி முரணான பதில் அளித்ததால், அவர் மீது நீதிபதி அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என்று நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்தனர்.
தொடர்ந்து, சுவாதி வரும் 30ம் தேதி மீண்டும் ஆஜராக உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மேலும், அன்றைய தினமும் இதே நிலை தொடர்ந்தால், நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க நேரிடும் என நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில், இந்த வழக்கு மீதான விசாரணை இன்று மதுரை கிளை நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது, நீதிமன்றத்தில் ஆஜரான சுவாதி மீண்டும் தனக்கு எதுவும் தெரியாது என்று கூறியுள்ளார். இதனால் பிறழ்சாட்சியாக மாறிய சுவாதி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீதிமன்றத்திற்கு தவறான தகவலை அளித்ததாக சுவாதி மீது குற்றவியல் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், வழக்கின் முக்கியத்துவத்தை அறியாமல் சுவாதி பொய்யான சாட்சி வழங்குவதாக தெரிய வருகிறது என்றும், சுவாதி மீண்டும் உண்மையை கூற இரண்டு வாரம் அவகாசம் பிறப்பிக்கப்படுவதாகவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
billaNov 30, 2022 - 11:10:34 PM | Posted IP 106.2*****