» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

குலசை கோவில் தசரா திருவிழா: பக்தர்கள் ஆயுதம், சாதி அடையாளத்துடன் பங்கேற்க தடை!

புதன் 3, செப்டம்பர் 2025 8:31:18 AM (IST)



குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவில் வேடம் அணியும் பக்தர்கள் ஆயுதங்கள் மற்றும் சாதி அடையாளத்துடன் பங்கேற்க கூடாது, இதை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கோட்டாட்சியா் சுகுமாறன் தெரிவித்துள்ளார்.

பிரசித்திபெற்ற குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா வருகிற 23-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. வருகிற அக்.2-ந் தேதி மகிஷா சூரசம்ஹாரம் நடக்கிறது. தொடர்ந்து 12 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவில் பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் செய்யப்படும் முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று கோவில் அருகில் உள்ள திருமண மண்டபத்தில் நடந்தது. இக்கூட்டத்திற்கு திருச்செந்தூர் கோட்டாட்சியா் சுகுமாறன் தலைமை தாங்கினார். 

கோவில் அறங்காவலர் குழு தலைவர் கண்ணன், அறங்காவலர்கள் கணேசன், வெங்கடேஷ்வரி, கோவில் ஆய்வாளர் முத்துமாரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயல் அலுவலர் வள்ளிநாயகம் வரவேற்றார். குலசேகரன்பட்டினம் இன்ஸ்பெக்டர் கண்ணன், போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சதிஷ் குமார் உட்பட அரசு அதிகாரிகள், சமூக ஆர்வலர் குணசீலன், உடன்குடி பஞ்சாயத்துயூனியன் முன்னாள் துணைத்தலைவர் ராஜதுரை, குலசேகரன்பட்டினம் பஞ்சாயத்துதுணைத் தலைவர் கணேசன் உட்பட 200-க்கும் மேற்பட்ட தசரா குழுவினர் கலந்து கொண்டு கருத்துகளை தெரிவித்தனர்.

தசரா குழுவினர் கூறுகையில், குலசேகரன்பட்டினம் சிதம்பரேஸ்வரர் கடற்கரையில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள், மின் விளக்கு, குடி நீர், மருத்துவ முகாம், கூடுதல் ஆம்புலன்ஸ், கூடுதல் கழிப்பறைகள், பெண்கள் உடை மாற்றும் அறைகள் அமைக்க வேண்டும், 1-ம்் திருவிழா மற்றும் 10, 11-ம்் திருவிழா நாட்களில் ஒரு வழி பாதை அமைத்து போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த வேண்டும், குலசேகரன்பட்டினம்-திருச்செந்தூர் ரோட்டில் உள்ள முட்செடிகளை அகற்ற வேண்டும், அனைத்து மெயின் ரோடுகளையும் மரமாத்து பணி செய்ய வேண்டும். முக்கிய திருவிழா நாட்களில் உடன்குடி, குலசேகரன்பட்டினம் பகுதியில் உள்ள டாஸ்மார்க் கடைகளை மூடவேண்டும், என தெரிவித்தனர்.

ஆயுதம், சாதி அடையாளத்திற்கு தடை

இதற்கு பதிலளித்து கோட்டாட்சியா் பேசுகையில், தசரா குழுவினர்களின் ஆலோசனைகள் அனைத்தும் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இந்தாண்டு கூடுதல் கழிப்பறைகள், குடிநீர் வசதி, மருத்துவ முகாம்கள், வாகன நிறுத்தங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வேடம் அணியும் பக்தர்கள் முக்கிய கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும். குறிப்பாக இந்த பக்தர்கள் இரும்பினால் செய்யப்பட்ட ஆயுதங்கள், சாதி அடையாளம் கொண்ட கொடிகள் கொண்டு வரக்கூடாது. இதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதைமீறி கொண்டு வரும் தசரா குழுவினர் அனைவர் மீதும் வழக்கு பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். கோவில் கணக்கர் டிமிட்ரோ நன்றி கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

CSC Computer Education

Arputham Hospital








Thoothukudi Business Directory