» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் கடல் குப்பை மேலாண்மை கருத்துப்பட்டறை!
வியாழன் 20, ஜூன் 2024 5:52:39 PM (IST)
தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் "கடல் மீன்வளத்தை பாதுகாக்கும் நோக்கில் கடல் குப்பை மேலாண்மை” என்ற விழிப்புணர்வு கருத்துப்பட்டறை நடைபெற்றது.
தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் "கடல் மீன்வளத்தை பாதுகாக்கும் நோக்கில் கடல் குப்பை மேலாண்மை” என்ற ஒரு நாள் விழிப்புணர்வு கருத்துப்பட்டறையை கல்லூரியின் மீன்வள உயிரியல் மற்றும் வள மேலாண்மைத் துறையானது மற்றும் "இந்திய மீன்வள கணக்கெடுப்பு நிறுவனத்துடன்” இணைந்து நடத்தியது. இக்கருத்துப்பட்டறையில் கல்லூரி ஆசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர்.
இவ்விழாவில் மீன்வள உயிரியல் மற்றும் வள மேலாண்மைத் துறை பேராசிரியர் மற்றும் தலைவர் ந. ஜெயக்குமார், வரவேற்புரை வழங்கினார். இந்திய மீன்வள கணக்கெடுப்பு நிறுவனம், சென்னை மற்றும் கொச்சி மண்டல இயக்குநர்களான திபுட்ரியர்ஸ் மற்றும் சிஜோ. ப. வர்க்கீஸ் வாழ்த்துரை வழங்கினார். இக்கல்லூரியின் முதல்வர் ப. அகிலன், தலைமையுரை வழங்கி பேசுகையில் கடல் குப்பைகளை முறையாக மேலாண்மை செய்திடல் மூலம் எவ்வாறு கடல் மீன்வளங்களை பேணி பாதுகாத்திட முடியும் என்பதனை பற்றி விரிவாக எடுத்துரைத்தார்.
அதனைத் தொடர்ந்து, இந்திய மீன்வள கணக்கெடுப்பு நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர் ச. பாபு "கடல் மீன்வளத்தை பாதுகாக்கும் நோக்கில் கடல் குப்பை மேலாண்மை” என்ற தலைப்பில் விரிவுரையாற்றினார். அவர் தமது உரையில், கடல் மீன்வளங்களின் முக்கியத்துவங்கள், கடல் குப்பைகளால் ஏற்படும் அச்சுறுத்தல்கள் மற்றும் கடல் குப்பை மேலாண்மைப் பற்றி விரிவாக விளக்கிக் கூறினார். இறுதியாக, இந்திய மீன்வள கணக்கெடுப்பு நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர் ஜேக்கப் தாமஸ் நன்றியுரை வழங்கினார். ரா. துரைராஜா மற்றும் க. கருப்பசாமி, உதவிப் பேராசிரியர், மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் இந்நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர்.