» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
எட்டயபுரம் வட்டத்தில் 2வது நாளாக ஆட்சியர் ஆய்வு!
வியாழன் 20, ஜூன் 2024 4:23:07 PM (IST)
எட்டயபுரம் வட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள், சேவைகள் ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி இன்று 2வது நாளாக களஆய்வு மேற்கொண்டார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் அரசின் அனைத்து நலத்திட்டங்களும், சேவைகளும் தங்கு தடையின்றி விரைந்து மக்களை சென்றடைவதை உறுதி செய்திட வேண்டுமென்ற உன்னத நோக்கத்தின் அடிப்படையில் மக்களை நாடி அவர்களின் குறைகளைத் தீர்க்க ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்" என்ற திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று (19.06.2024) மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி, எட்டயபுரம் வட்டத்தில் பல்வேறு அரசு துறைகளின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள்/சேவைகள் ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்து கள ஆய்வு மேற்கொண்டார்.
மேலும், எட்டயபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்டு, அவர்களின் கோரிக்கைகள் குறித்து கனிவுடன் கேட்டறிந்ததுடன் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். பின்னர் நேற்று இரவு எட்டயபுரத்தில் மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி, தங்கி இன்று (20.06.2024) தொடர்ந்து கள ஆய்வு மேற்கொண்டார்.
எட்டயபுரம் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் இருந்து பால் கொள்முதல் குறித்து கேட்டறிந்து பாலின் தரத்தினை பரிசோதனை செய்த ஆய்வுகளை பார்வையிட்டார். அதனைத்தொடர்ந்து எட்டயபுரம் பேரூராட்சி மூலம் வீடுகளுக்கு வழங்கப்படும் குடிதண்ணீரில் குளோரின் அளவு சரியாக உள்ளதா என்பது குறித்து பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் எட்டயபுரம் பேரூராட்சி அலுவலகத்தில் உள்ள தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் பேரூராட்சி பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு தண்ணீர் வழங்கக்கூடிய 3 இலட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியினை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதனைத்தொடர்ந்து எட்டயபுரம் தேர்வுநிலை பேரூராட்சி திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் உள்ள வளமீட்பு பூங்காவினையும், வளமீட்பு பூங்காவில் உள்ள மண்புழு உரம் தயாரிக்கும் கூடத்தையும் பார்வையிட்டார்.
மேலும், எட்டயபுரம் மேல ரத வீதியில் உள்ள ஆவின் பாலகத்தில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் பாலின் தரம் குறித்து பார்வையிட்டு மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார். அதனைத்தொடர்ந்து எட்டயபுரம் கால்நடை மருந்தகத்தை பார்வையிட்டு பரிசோதனைக்காக வந்திருந்த மாட்டின் உரிமையாளரிடம் கால்நடைகளுக்கு கொடுக்கப்படும் சத்து மாவினை வழங்கினார்.
பின்னர், எட்டயபுரம் வட்டம் கீழஈரால் ஊராட்சி, ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி நற்கலைக்கோட்டையில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தில் பள்ளி குழந்தைகளுக்கு உணவு வழங்கப்படுவதை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு குழந்தைகளுடன் கலந்துரையாடி அவர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்து ஆய்வு செய்தார்.
இந்நிகழ்வின்போது, கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் ஜேன் கிறிஸ்டி பாய், கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் மரு.சஞ்சீவிகுமார், எட்டயபுரம் வட்டாட்சியர் ராமகிருஷ்ணன், எட்டயபுரம் பேரூராட்சி செயல் அலுவலர் சுப்பிரமணியன் மற்றும் அனைத்து துறை அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.