» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பிளஸ் 2 மாணவி தற்கொலை: சிபிசிஐடி விசாரணை தொடங்கியது

வியாழன் 22, செப்டம்பர் 2022 8:40:31 AM (IST)

ஓட்டப்பிடாரம் அருகே பிளஸ்-2 மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை தொடங்கியது. 

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள எஸ்.அண்டகுடி பகுதியைச் சேர்ந்தவர் ராமநாதன் மகள் வைத்தீஸ்வரி (17). இவர் தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே சில்லாங்குளத்தில் உள்ள தனியார் மேல்நிலைப்பள்ளி விடுதியில் தங்கி இருந்து பிளஸ்-2 படித்து வந்தார். நேற்று முன்தினம் பள்ளிக்கூடத்தில் உள்ள கழிப்பறையில் வைத்தீஸ்வரி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பள்ளிக்கு விரைந்து வந்து வைத்தீஸ்வரி உடலை பார்த்து கதறி அழுதனர். இதுகுறித்து தகவல் அறிந்த பசுவந்தனை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். 

மேலும், தனது மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாக பெற்றோர் போலீசில் புகார் தெரிவித்தனர். இந்நிலையில் நேற்று அமைச்சர் கீதாஜீவன், மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், எஸ்பி பாலாஜி சரவணன், கோவில்பட்டி கோட்டாட்சியர் மகாலட்சுமி மற்றும் அதிகாரிகள், மாணவியின் குடும்பத்தினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னர் தான் முடிவு எடுக்கப்படும். மாணவியின் மரணத்தில் சந்தேகம் இருந்தால் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

பின்னர் வைத்தீஸ்வரி தற்கொலை செய்து கொண்ட இடத்தை அமைச்சர், அதிகாரிகள் நேரில் பார்வையிட்டனர். பள்ளி வளாகத்தையும் பார்வையிட்டு, ஆய்வு செய்தனர். பின்னர் அமைச்சர் கீதாஜீவன் கூறுகையில், 'மாணவி வைத்தீஸ்வரி மரணம் குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீஸ் விசாரணை நடத்த பரிந்துரைக்கப்படும். அந்த மாணவி எழுதிய கடிதம் ஒன்று கிடைத்ததாக தெரிகிறது. அது முறையாக காவல்துறை விசாரணையில் உள்ளது' என்றார். தொடர்ந்து மாணவியின் பெற்றோரை சந்தித்து அமைச்சர் ஆறுதல் கூறினார்.

இதனையடுத்து நேற்று மாலை 4 மணி அளவில் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் வைத்தீஸ்வரி உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அவருடைய பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனால் மருத்துவமனை வளாகத்தில் பாதுகாப்பு பணிக்கு போலீசார் குவிக்கப்பட்டனர். மேலும், அமைச்சரின் அறிவிப்பை தொடர்ந்து பசுவந்தனை போலீசார் வழக்கு சம்பந்தமான ஆவணங்களை சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் ஒப்படைத்தனர். நேற்று மாலையே சி.பி.சி.ஐ.டி. துணை சூப்பிரண்டு ராஜ்குமார் தலைமையிலான போலீசார் பள்ளி வளாகத்தை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர்.


மக்கள் கருத்து

ithukkumSep 22, 2022 - 09:10:30 AM | Posted IP 162.1*****

Udane kallakurichi Mari school than kaaranam nu sollida poranunga.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Thoothukudi Business Directory